நடுரோட்டில் ரெளடி வெட்டிக் கொலை: சென்னையில் பரபரப்பு
சென்னை:
சென்னை அண்ணா நகர் பகுதியில் பட்டப் பகலில் நடுரோட்டில் பிரபல ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை முகப்பேர் காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் ஜான் (25). தச்சு வேலை செய்து வந்த இவர் பிரபல ரெளடியாவார்.
ஷெனாய் நகரைச் சேர்ந்த கஞ்சா வியாபாரியான கிருஷ்ணவேணி என்ற பெண்ணின் மகன் சேகர் சில மாதங்களுக்கு முன் கொல்லப்பட்டார். அதில் முக்கிய குற்றவாளியாக ஜான் கைது செய்யப்பட்டார்.
சமீபத்தில்தான் ஜாமீனில் விடுதலையாகிருந்தார்.
இந் நிலையில் இன்று கிறிஸ்துமஸ் என்பதால் காலையில் சர்ச்சிற்கு சென்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். அண்ணா நகர் அரசு ஊழியர் குடியிருப்பு அருகே அவர் வந்தபோது, 5 பேர் கும்பல் ஆட்டோவில் வந்து வழிமறித்து, ஜானை சரமாரியாக வெட்டியது.
இதைக் கண்ட அப் பகுதி மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். சரமாரியாக வெட்டப்பட்ட ஜானை போலீசார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.
கஞ்சா வியாபாரி பெண்ணின் மகன் கொலைக்கு பதிலடியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.
ஜான் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை போலீசார் பிற்பகலிலேயே கைப்பற்றிவிட்டனர். குற்றவாளிகளும் அடையாளம் காணப்பட்டுவிட்டனர். இவர்களைப் பிடிக்க 3 அசிஸ்டெண்ட் கமிஷ்னர்கள் தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications