பதவி சுகத்தை அனுபவித்து ஓடிய திமுக, மதிமுக: பா.ஜ.க. கடும் குற்றச்சாட்டு
கோவை:
திமுகவும் மதிமுகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து இத்தனை ஆண்டுகள் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு இப்போது தேர்தல் வரும் நேரத்தில் ஓடிப்போய் விட்டன என பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன் குற்றம் சாட்டினார்.
கோவையில் ஆர்.எஸ்.எஸ். முகாமில் கலந்து கொண்ட பின் நிருபர்களிடம் பேசிய அவர்,
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பா.ஜ.கவுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. பிரதமராக வாஜ்பாயை ஏற்க அதிமுக முன் வந்தால் கூட்டணி அமைக்கத் தயார். திமுகவும் மதிமுகவும் இத்தனை ஆண்டுகளாக மத்தியில் பதவி சுகத்தை அனுபவித்தன.
ஒன்றரை ஆண்டுக்கு முன்பே காங்கிரசுடன் பேசி வைத்துவிட்டு இப்போது கூட்டணியை விட்டு ஓடியிருக்கின்றன.
திமுக இவ்வளவு செய்தும் நாங்கள் அதிமுகவுடன் பேச்சு நடத்தவே இல்லை. அக் கட்சியுடன் கூட்டணி அமையாவிட்டாலும் தனித்துப் போட்யிட பா.ஜ.க. தயார். கூட்டணி அமைக்கத் தயார் என்றரீதியில் தான் முதல்வர் ஜெயலலிதாவும் அதிமுகவினருடனான நேர்காணல் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.
வைகோவின் விடுதலைக்கு பா.ஜ.க. எந்த விதத்திலும் தடையாக இருக்காது என்றார் கணேசன்.