கூட்டணி குறித்து முஸ்லீம் லீக் கட்சியில் அதிருப்தி
சென்னை:
திமுகவுடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கூட்டணி வைத்துள்ளதற்கு கட்சியின் துணைத் தலைவர் அப்துல்ஜலீல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தற்போது திமுகவுடன் கூட்டணி வைக்கமுடிவு செய்துள்ளது. இதையடுத்து அக் கட்சியின் தலைவர்கள் சமீபத்தில் கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.
இந் நிலையில், கடந்த 18ம் தேதி சென்னையில் நடந்த கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் கருணாநிதியை சிறப்புவிருந்தினராகவும் அழைத்திருந்தனர்.
இதற்கு தற்போது கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கட்சியின் துணைத் தலைவர் அப்துல் ஜலீல் கூறுகையில்,தற்போதைய நிலையில் அதிமுகவுடனான கூட்டணியை முறிக்க வேண்டிய அவசியம் இல்லை. திமுகவுடன்கூட்டணி குறித்து பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்படவில்லை. கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மொய்தீன்தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளார்.
பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியை அழைப்பது குறித்தும் ஒப்புதல் பெறப்படவில்லை.மேலும் அக் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கவும்அனுமதிக்கப்படவில்லை என்றார் அவர்.