அமைச்சர் பேச்சை கண்டித்து திமுக, பாமக வெளிநடப்பு
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்பாக சட்டசபையில் பேசிய அமைச்சர் தளவாய் சுந்தரத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, பாமக உறுப்பினர்கள் இன்று சட்டசபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது சட்டசபையில் இன்று 2வது நாளாக விவாதம் நடந்தது. அப்போது திமுக உறுப்பினர் கு.பிச்சாண்டி பேசுகையில்,
ஆளுநர் உரையே வெறும் அலங்காரமாதத் தான் இருக்கிறது. முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் பச்சைமயமாக உள்ளது. ஆனால், தமிழகத்திலோ வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது.
மே மாதம் வீராணம் தண்ணீர் சென்னைக்கு வரும் என்று ஆளுநர் உரையில் அரசு தெரிவித்துள்ளது. வீராணத்திலேயே தண்ணீர் இல்லை. இதோ போட்டோ (காய்ந்த ஏரியின் படம்). அப்படி இருக்கையில் சென்னைக்கு மே மாதம் தண்ணீர் வராது என்றே நினைக்கிறேன் என்றார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் அன்பழகன், போரிங் போட்டு வீராணத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வரப் போகிறோம். மே மாதம் தண்ணீர் வரும். அதை நீங்கள் குடிக்கத் தான் போகிறீர்கள்.
தொடர்ந்து பேசிய பிச்சாண்டி, இந்தத் துறைக்கு இத்தோடு மூன்று மந்திரிகள் மாறிவிட்டார்கள். தண்ணீர் தான் வரவில்லை. இப்போதைய மந்திரி அன்பழகன் வீராணம் ஏரியையாவது பார்த்திருப்பாரா என்று தெரியவில்லை.
மாநிலத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்க அதையெல்லாம் விட்டுவிட்டு தமிழக அரசு பொடா, டெஸ்மா, எஸ்மா ஆகிய சட்டங்களை எதிர்க்கட்சியினர் மீது பிரயோகித்து அரசியல் செய்து வருகிறது.
குறிப்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் உள்ளார். அவர் மீது பொடா சட்டத்தை பழிவாங்குவதற்ாக பயன்படுத்தியுள்ளது தமிழக அரசு என்றார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் தளவாய் சுந்தரம், கடந்த2002ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வைகோ பேசுகையில், என்றும், எப்போதும் விடுதலைப் புலிகளை ஆதரிப்பேன் என்று பேசினார் என்றார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக சட்டமன்றத் தலைவர் அன்பழகன் எழுந்து,வழக்கு நிலுவையில் உள்ள ஒரு விவகாரம் குறித்துப் பேச உறுப்பினர்களை சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது.எதிர்க் கட்சியினருக்கு ஒரு நியாயம், ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம் என இருக்கக் கூடாது என்றார்.
ஆனால், சபாநிாயகர் காளிமுத்து தளவாய் சுந்தரத்தை தொடர்ந்து பேச அனுமதித்தார். இதைக் கண்டித்து திமுகஉறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்வதகா கூறி விட்டு வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள்கட்சியினரும் வெளிநடப்புச் செய்தனர்.
சபாநாயகருக்கு கண்டனம் தெரிவிப்பதாகக் கூறிய மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள்வெளிநடப்பில் கலந்து கொள்ளவில்லை.












Click it and Unblock the Notifications