நல்ல சந்திப்பு, நாட்டுக்கு தேவையான சந்திப்பு"
சென்னை:
சோனியா காந்தியுடன் தான் நடத்திய சந்திப்பு நல்ல சந்திப்பு, நாணயமான சந்திப்பு, நாட்டுக்குத் தேவையான சந்திப்பு என்று திமுகதலைவர் கருணாநிதி கூறினார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சோனியா காந்தியை வெளிநாட்டவர் என்று கூறும் அநாகரீகத்தை திமுக எந்தக்காலத்திலும் ஆதரித்தது இல்லை. நாங்கள் வேற்று அணியில் இருந்தபோதும் கூட அவரைத் தனிப்பட்ட முறையில் அநாகரீகமாகவிமர்சித்தது இல்லை.
அண்ணா வழியில் பண்பாட்டோடு அரசியல் நடத்துபவர்கள் நாங்கள்.
அவருடனான இந்தச் சந்திப்பு நல்ல சந்திப்பாக, நாணயமான சந்திப்பாக இருந்தது. இது நாட்டுக்கும் மிகத் தேவையான சந்திப்பு.அவரது மாமியாரும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியும் இதைப் போலத் தான் அறிவாலயம் வந்து என்னைச் சந்தித்தார்.அதே வழியில் அவரது மருமகள் சோனியாவும் நடந்துள்ளார். அவரை பிரதமராக திமுக ஏற்கும்.
திமுக வேட்பாளர் பட்டியல், விருதுநகர் மாநாட்டின்போது வெளியிடப்படும். அனைத்துத்தொகுதிகளிலும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்அவர்.
கருணாநிதிக்கு கிருஷ்ணா நன்றி:
இதற்கிடையே இன்று பாண்டிச்சேரி வந்த கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததிமுக தலைவர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இன்று காலை திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்துக்கு தனிப்பட்ட பயணமாக வந்த அவர் பாண்டிச்சேரி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஜனநாயகமுற்போக்குக் கூட்டணிக்கு பெரும் வெற்றி கிடைக்கும். இத்தகைய மதச்சார்பற்ற கூட்டணியை அமைத்த கருணாநிதிக்கு நன்றி.
தென் மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றியைப் பெறும். கர்நாடகத்திலும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிவெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும்.
காவிரியில் போதுமான தண்ணீர் இல்லாதது, கர்நாடகத்தில் நிலவும் வறட்சி ஆகியவை காரணமாகவே தமிழகத்துக்குத் தண்ணீர்திறந்து விட முடியவில்லை என்றார் அவர்.