2 மாதங்களில் புலிகளுடன் மீண்டும் பேச்சு: கதிர்காமர்
கொழும்பு:
இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண்கதிர்காமர் இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவைச் சந்தித்துப்பேசினார்.
சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் சந்திரிகாவின் கட்சி வென்று ஆட்சியைப் பிடித்த பின்கதிர்காமர் இந்தியா வந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
சின்ஹாவிடம் பேசிய கதிர்காமர், அடுத்த இரு மாதங்களுக்குள் விடுதலைப் புலிகளுடன் மீண்டும்அமைதிப் பேச்சுவார்த்தையைத் துவக்க புதிய அரசு ஆர்வத்துடன் இருப்பதாகத் தெரிவித்தார்.
புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் ரத்தானதையடுத்து நாடு திரும்பிவிட்ட நார்வே அமைதிக்குழுவினர் மீண்டும் அடுத்த மாதம் கொழும்பு வரவுள்ளதாகவும் கதிர்காமர் இந்தியாவிடம்தெரிவித்துள்ளார்.
மேலும் வட கிழக்கு இலங்கையில் மறுசீரமைப்புப் பணிகளைத் துவக்க அதிபர் சந்திரிகா தீவிரமாகஇருப்பதாகவும், இந்த விஷயத்தில் புலிகளுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க முயற்சி எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் வாஜ்பாயின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ராவையும் கதிர்காமர் சந்திக்கவுள்ளார்.
நாடு திரும்ப அகதிகள் ஆர்வம்: ஐ.நா
இதற்கிடையே போரையடுத்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்களில்பெரும்பாலானவர்கள் நாடு திரும்ப ஆர்வத்துடன் இருப்பதாக ஐ.நா. சபையின் அகதிகள்மறுவாழ்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நிருபர்களிடம் பேசிய ஐ.நா. அகதிகள் மறுவாழ்வு ஆணையர் டென்னிஸ் மெக்நமாரா,தென் இந்தியாவில் சுமார் 60,000 தமிழர்கள் அகதிகள் முகாம்களில் வசித்து வருகின்றனர்.
இவர்களில் சுமார் 6,000 பேர் நாடு திரும்பிவிட்டனர். மற்றவர்களை மொத்தமாக திரும்ப அழைத்துவர இந்தியாவுடன் இலங்கை பேச்சு நடத்த வேண்டும்.
அதே நேரத்தில் முகாம்களுக்கு வெளியே வசிக்கும் சுமார் 30,000 தமிழர்கள் இலங்கை திரும்பஆர்வம் காட்டவில்லை.
முதலில் இலங்கைக்குள்ளேயே இடம் பெயர்ந்த சுமார் 4 லட்சம் தமிழர்களை மீண்டும் அவர்களதுவாழிடங்களுக்கு மீண்டும் அனுப்பி வைக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை இலங்கை செய்யாவிட்டால் சர்வதேச உதவிகள் நிறுத்தப்படலாம் என்றார் டென்னிஸ்மெக்நமாரா.