மதுரை: கொட்டும் மழையில் கள்ளழகருக்கு எதிர் சேவை- ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்
மதுரை :
மதுரை சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான கள்ளழகர் எதிர்சேவை நிகழ்ச்சி மதுரையில் கோலாகலமாகநடந்தது.
மதுரை சித்திரைத் திருவிழா நடந்து வருகிறது. மீனாட்சி அம்மன் திருக் கல்யாண வைபவம் சனிக்கிழமை மிக விமரிசையாகநடந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரும் அளவில் பக்தர்கள் திரண்டு திருக் கல்யாணத்தை கண்டு களித்தனர்.
அதைத் தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடந்தது. இந் நிலையில் அருள்மிகு கள்ளழகர் நேற்று மாலை அழகர் கோவிலிலிருந்துமதுரைக்குப் புறப்பட்டார். இன்று அதிகாலை அவர் மதுரை மாநகரின் எல்லையான மூன்றுமாவடியை வந்தடைந்தார்.
மூன்றுமாவடி மற்றும் புதூர் பகுதிகளில் அழகருக்கு பக்தர்கள் வரவேற்பு அளிக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. கொட்டும்மழையையும் பொருட்படுத்தாமல் கையில் குடைகளுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து அழகரை வரவேற்ற காட்சிகண்கொள்ளாததாக இருந்தது.
ஒவ்வொரு மண்டகப் படிகளிலும் அழகர் எழுந்தருளி அருள் பாலித்தார்.
இன்று மாலை தல்லாகுளம் பகுதியில் அழகருக்கு எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை காலை வைகை ஆற்றில்கள்ளழகர் இறங்குகிறார்.
அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக ஆற்றில் குட்டை அமைக்கப்பட்டு லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு தேக்கிவைக்கப்பட்டு வருகிறது. இப்போதும் மழையும் பெய்து அந்தக் குட்டையில் நீர் நிறைந்து வருவதால் பக்தர்கள் பெரு மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.