பொன்னையன் பெயர் நீக்கம்: 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்
சென்னை:
வாக்காளர் பட்டியலில் இருந்து அமைச்சர் பொன்னையனின் பெயர் நீக்கப்பட்ட விவகாரத்தில் 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதுமே லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதில் அமைச்சர் பொன்னையனின் குடும்பமும் அடக்கம்.
அண்ணாநகரில் வசித்து வரும் பொன்னையன் தனது பெயர் நீக்கப்பட்டது குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் தந்தார். இதனை விசாரித்த தேர்தல் கமிஷன், கீழ்ப்பாக்கம் மண்டல அதிகாரி சீனிவாசனை விடுமுறையில் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளது.
மேலும் 3 அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது.
இந் நிலையில் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். முரசொலியில் அவர் எழுதியிருப்பதாவது:
வருவாய்த்துறை அதிகாரிகள் தான் இந்தப் பட்டியலை தயார் செய்கின்றனர். அவர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள். பட்டியலில் அரசு அலுவலர்கள், சிறுபான்மையினர் பெயர்கள் அதிகம் நீக்கப்பட்டுள்ளனர்.
இதில் தங்கள் மீது பழியில்லை என்று காட்டிக் கொள்வதற்காகவே, வேண்டுமென்றே அமைச்சர் பொன்னையனின் பெயரையும் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கி அதை செய்தியாக்கியிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
ஆனால், திமுகவுக்கு சாதகமாக இயங்கும் அரசு ஊழியர்கள் தான் இந்தப் பட்டியலில் வேண்டுமென்றே குளறுபடி செய்ததாக அதிமுக கூறுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்க் கட்சியினருக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் திட்டமிட்டே லட்சக்கணக்கானவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இந்த விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதா தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
இந் நிலையில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெரும்பாலான அரசு ஊழியர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.