வாக்காளர் பட்டியலில் காணாமல் போனவர்கள்: புரியாத புதிர்!
சென்னை:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அண்ணனில் ஆரம்பித்து, நிதியமைச்சர் பொன்னையனின் குடும்பம் வரை, அரசுஊழியர்கள் முதல் சாதாரண பாமரர் வரை நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் ஓட்டுப் போட முடியாமல் பல லட்சம்வாக்காளர்கள் பரிதவித்துப் போயினர்.
இந்திய குடிமகன் ஒவ்வொருவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று கலாம் கடந்த வாரம்தான் நாட்டு மக்களுக்குக்கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது அண்ணனுக்கே நேற்று வாக்குரிமை மறுக்கப்பட்டது. புகைப்பட அடையாள அட்டைவைத்திருந்தும் அவரும், அவரது மகனும் ஓட்டுப் போட முடியவில்லை.
மாநில நிதியமைச்சர் பொன்னையன், அவரது மனைவி, மகன் ஆகிய மூவரும் நேற்று ஓட்டுப் போட முடியாமல் ஏமாற்றத்துடன்வீடு திரும்பினர்.
பிரபல டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியின் மாமனார் ஜெய்சங்கரும் புகைப்பட அடையாள அட்டை வைத்திருந்தும் பட்டியலில்பெயர் இல்லாததால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். இவர், தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியின்உறவினர் என்பதுதான் பெரிய வேடிக்கை.
இப்படி ஓட்டுமை மறுக்கப்பட்டவர்கள் எக்கச்சக்கம். ஒவ்வொரு தொகுதியிலும் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களின்பெயர்கள் பட்டியலில் இடம் பெறாமல் போயுள்ளது.
திமுக கூட்டணிக்கு சாதகமாக செயல்பட்ட அரசு ஊழியர்கள் தான் வேண்டுமென்றே எங்களது வாக்குகளை நீக்கிவிட்டனர் எனஅதிமுக குற்றம் சாட்டுகிறது. இதற்கு பொறுப்பேற்க வேண்டியது தேர்தல் கமிஷன் தான் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஆனால், அரசு ஊழியர்கள், சிறுபான்மையினரின் பெயர்கள் அதிக அளவில் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு அதிமுக அரசே காரணம்என திமுக குற்றம் சாட்டுகிறது.
தேர்தல் கமிஷனுக்கு என தனியாக ஊழியர்கள் இல்லை. வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணிக்கு மாநில அரசின் உதவியைத்தான் தேர்தல் கமிஷன் அண்டியுள்ளது. மாநில அரசு ஊழியர்கள் தான் இந்தப் பணிகளை செய்கின்றனர்.
தமிழகத்தில் லட்சக்கணக்கான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் வர, உடனடியாக அந்தபோலி பெயர்களை நீக்குமாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட, கால அவகாசம் மிகக் குறைவாக இருந்ததால், களத்தில் பேனாவோடுகுதித்த அரசு ஊழியர்கள் மானாவாரியாக பெயர்களை அடித்துள்ளதாக நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், பெயர்கள் நீக்கப்படுவதை மாநில தேர்தல் கமிஷன் சரியாக கண்காணிக்கவில்லை என்றும் தெரிகிறது.
இது தவிர அதிகாரிகளின் உதவியோடு சிறுபான்மையினர், அரசு ஊழியர்களின் வாக்குகள் நீக்கப்பட்டிருக்கலாம் என்பது திமுகதரப்பினரின் வாதம்.
மத்திய சென்னை தொகுதியில் சில தெருக்களில் ஒட்டு மொத்தமாக வாக்காளர்கள் விடுபட்டுள்ளனர். பரசுராம ஈஸ்வரன் கோவில்தெருவில் உள்ள 3,000 வாக்காளர்களின் பெயர்களும் பட்டியலில் இல்லை. காமராஜர் தெருவில் 800 பேருக்கு ஓட்டு இல்லை.கே.கே.நகரின் ஒரே பகுதியில் 3,000 பேருக்கு ஓட்டுரிமை இல்லை.
திருச்சியில் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளில் பெரும்பாலான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இல்லை.ஆழ்வார்த்தோப்பு என்ற பகுதியில் 2,000 முஸ்லீம்கள் ஓட்டு போட முடியவில்லை. அதேபோல, லால்குடி பகுதியில், 2,000கிறிஸ்தவர்களால் ஓட்டுப் போட முடியவில்லை. இதற்கு அதிமுக தான் காரணம் என இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கோவை முத்து காலனி பகுதியில் 1,000 பேருக்கும் மேல் ஓட்டுப் போட முடியவில்லை. செங்கல்பட்டு தொகுதிக்குட்பட்டசூனாம்பேடு கிராமத்தில் தலித்களின் ஓட்டுக்கள் அனைத்தும் நேற்று தொலைக்கப்பட்டு விட்டன. இவ்வாறு மாநிலம் முழுவதுமேகூக்குரல்கள்.
இதுகுறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் சாரங்கி கூறுகையில், பெருமளவு வாக்காளர்கள் விடுபட்டுப் போனது குறித்து தேர்தல்ஆணையம் விசாரணை நடத்தும். இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications