பா.ஜ.கவின் விஷம பிரசாரம்: கம்யூ. தலைவர் குற்றச்சாட்டு
சென்னை:
மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு 5 ஆண்டு காலம் பதவியில் நீடிக்க கம்யூனிஸ்ட் கட்சிகள்அனுமதிக்காது என்று விஷமத்தனமான பிரசாரத்தை பாரதீய ஜனதாக் கட்சி மேற்கொண்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மக்களிடையே பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது பாஜக. காங்கிரஸ் கூட்டணி அரசின் ஸ்திரத்தன்மைக்கு கம்யூனிஸ்டுகள் இடையூறாக இருப்பார்கள் என்பதே அவர்களது விஷமத்தனமான பிரசாரம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்யும், இதில் சந்தேகமே இல்லை.
குற்றப்பின்னணி உள்ளவர்கள் அமைச்சர்களாகக் கூடாது என்று பாஜக கூறுவது அதன் இரட்டை வேடத்தையே அம்பலப்படுத்துகிறது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட அத்வானியை அருகில் வைத்துக் கொண்டு அவர்கள் இவ்வாறு கூறுவது கேலிக் கூத்தாக உள்ளது.
காங்கிரஸ் அரசின் பொருளாதாரச் சீர்திருத்தங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலையிடாது. அதேசமயம், மனிதாபிமானத்துடன் அவை மேற்கொள்ளப்பட வேண்டும்.
நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்யப் போகும் பட்ஜெட்டில் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். ஏழைகளுக்கும், மக்களுக்கும் தோழமையான வகையில் பட்ஜெட் அமைய விரும்புகிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications