25.58 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ்
சென்னை:
தமிழகம் முழுவதும் 22 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், 3.58 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் பஸ் பாஸ் வழங்கப்படவுள்ளது.
தேர்தல் தோல்வியையடுத்து முதல்வர் ஜெயலலிதா அறிவித்த முக்கிய சலுகைகளில் இதுவும் ஒன்று. அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படவுள்ளது.
அதே போல அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் 50 சதவீத கட்டண சலுகையுடன் பஸ் பாஸ் தரப்படவுள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள் மூலமாக பஸ் பாஸ்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த 1ம் தேத் முதல் தரப்பட்டு வருகின்றன. ஜூலை 15ம் தேதிக்குள் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பஸ் பாஸ்கள் வழங்கிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் 22 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகளும், 3.58 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளும் பலனடைவார்கள் என கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்காக அரசு ரூ. 250 கோடியை செலவிடவுள்ளதாக நிதித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையே தனியார் பள்ளி, கல்லூரிகளில் அந்தந்த நிர்வாகத்தினரே பஸ்களை இயக்குவதால், மாணவர்களுக்கு அரசின் இலவச பஸ் பாஸ்களைப் பெற்றுத் தர ஆர்வம் காட்ட மறுத்து வருகின்றனர்.
இதனால் பஸ் கட்டணம் என்ற பெயரில் அடித்து வரும் கொள்ளையைத் தொடர முடியாது என இந்த நிர்வாகங்கள் கருதுகின்றன.
இது குறித்து பெற்றோர் புகார் தந்தால் பள்ளி நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயாராக இருப்பதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.