வாக்காளர்கள் பெயர் நீக்கம்: விசாரணை ஆரம்பம்
நாகர்கோவில்:
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக கேரள மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தாமஸ் தனது விசாரணையை கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று தொடங்கினார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது தகுதி வாய்ந்த வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால் லட்சக்கணக்கான வாக்காளர்களால் வாக்களிக்க இயலாமல் போனது.
இது குறித்து விசாரணை நடத்த கேரள மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தாமசுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து தாமஸ் இன்று தனது விசாரணையைத் தொடங்கினார்.
நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேஷ் லக்கானியுடன் ஆலோசனை நடத்திய அவர் தேர்தலின்போது தேர்தல் அதிகாரிகளாக இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்.
இதையடுத்து வீடு வீடாக சென்று வாக்காளர்கள் குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எத்தனை வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர், அவர்களது பெயர்கள் எப்படி நீக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தவுள்ளேன்.
சட்டசபை தொகுதி வாரியாக விசாரணை நடைபெறும் என்றார். அடுத்த வாரம் தாமஸ் சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications