கேரள கலெக்டர் அத்துமீறவில்லை என்கிறார் கோவை கலெக்டர்
கோவை:
கோவை மாவட்டம் சிறுவானி காட்டுப் பகுதியில் உள்ள கல்குத்தியில் தடுப்பு அணையை கேரள அதிகாரிகள் உடைக்கவில்லை என கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கோசலராமன் கூறியுள்ளார்.
தமிழக எல்லைக்குள் அமைந்த, சிறுவானிப் பகுதியில் உள்ள ஆட்டுமலையில் ஓடும் காட்டாற்றின் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட ஆட்சித் தலைவர் கெளசிக் தலைமையிலான அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து ஒரு தடுப்பணையை உடைத்து தண்ணீரை கேரளாவுக்குத் திருப்பி விட்டதாக தகவல்கள் வந்தன.
இதனால் கோவை விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு அதிகாரிகளும் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தனர். இது குறித்து விசாரித்து அறிக்கை தருமாறு கோவை மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கோசலராமன், சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஆட்டுமலைப் பகுதியில் ஆரம்பத்தில் இருந்த நீரோடையில் எந்த மாற்றம் இல்லை. வழக்கம் போலவே அது தமிழகத்திற்கும், கேரளாவுக்கும் போய்க் கொண்டுள்ளது.
அங்கு எந்த அத்துமீறலும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை என்றார்.
ஆனால், கேரள ஆட்சித் தலைவர் தலைமையிலான அதிகாரிகள் தடுப்பணையை உடைப்பது போல படங்களுடன் வெளியான செய்திகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கோசலராமன் பதில் அளிக்கவில்லை.
இதனால் இந்த விவகாரத்தில் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.