35 வயதை கடந்தாலும் ஆசிரியர் பணியில் சேரலாம்: ஜெ. இன்னொரு சலுகை
சென்னை:
35 வயதைக் கடந்தவர்களும் இனிமேல் ஆசிரியர் பணியில் சேரலாம் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன்மூலம் ஆசிரியர் பயிற்சிக் கல்வியை முடித்துவிட்டு வேலையில்லாமல் காத்திருக்கும் ஆயிரக்கணக்கானோர் பலனடைவர்.
மக்களவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகைகள், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் ரத்து என பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் ஜெயலலிதா.
அந்த வரிசையில் தற்போது ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை நீக்கி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இடை நிலை ஆசிரியர் பயிற்சியை முடித்து வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்துள்ளவர்களுக்கு வயது வரம்பு நீக்கப்படுகிறது. அதன்படி தற்போதைய 35 வயது என்ற வரம்பு நீக்கப்பட்டு அனைத்து வயதினரும் பணியில் சேர வாய்ப்பு கிடைக்கும்.
இதன் மூலம் இடை நிலை உடல் கல்வி, சிறப்பு பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.