தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணம்
சென்னை:
தமிழக ஆளுநர் ராம் மோகன் ராவ் திடீரென இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
காங்கிரஸ் கூட்டணி அரசு பதவிக்கு வந்தவுடன், பாஜக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் பதவி ஆட்டம் கண்டுள்ளது. யாரையும் பதவி நீக்கம் செய்ய மாட்டோம் என காங்கிரஸ் கூட்டணி அரசு கூறியுள்ள நிலையிலும், சில ஆளுநர்கள் விரைவில் நீக்கப்படுவர் என்ற பேச்சும் அடிபடுகிறது.
தமிழக ஆளுநரும் அந்தப் பட்டியலில் இருப்பதாகத் தெரிகிறது.
10 நாட்களுக்கு முன் ராம் மோகன் ராவ் டெல்லி சென்றபோது அவரிடம் தமிழக அரசு குறித்து உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் விவாதித்ததாகத் தெரிகிறது.
மக்களவைத் தேர்தலின்போது சிவகாசியில் அமைச்சர் இன்பத்தமிழன், மதிமுக வேட்பாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரனை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் குறித்து அறிக்கை அனுப்பாதது உள்பட பல விஷயங்களில் ராம்மோகனிடம் சிவராஜ் பாட்டீல் கடுமையாக கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்தார்.
இதன் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க ராவ் முயன்றார். ஆனால், நீண்ட காத்திருப்புக்குப் பின்னரே அது சாத்தியமானது.
இதையடுத்து சென்னை திரும்பிய ஆளுநரை முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். அப்போது தன்னை மத்திய அரசு பதவி நீக்கம் அல்லது இடமாற்றல் செய்யலாம் என முதல்வரிடம் ராவ் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் இன்று திடீரென ராவ் மீண்டும் டெல்லி சென்றுள்ளார். அவரது பயணம் வழக்கமான ஒன்றுதான் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தாலும், அவரது பயணத்தில் முக்கியத்துவம் உள்ளதாக கூறப்படுகிறது.
அவரை டெல்லிக்கு வரச் சொல்லி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications