மண்ணுக்குள் புதைந்து தவம் இருந்த சாமியார் பரிதாப சாவு
மதுரை:
மதுரை அருகே மண்ணுக்குள் புதைந்து தவம் செய்வதாக சொன்ன சாமியார் பரிதாபமாக இறந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஜெகதாபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ஆனந்தசாமி. இவர் சிறு வயதிலேயே துறவறம் பூண்டு சாமியாராகி விட்டார்.
சாமியாரான பின்னர் அடிக்கடி தவம் இருப்பது வழக்கம். இந்த நிலையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டி அருவி பகுதியில் உள்ள ரமணகிரி ஆசிரமம் அருகே குழி தோண்டி, அதற்குள் தவம் இருக்கப் போவதாக ஆனந்தசாமி அறிவித்தார்.
அதன்படி சனிக்கிழமை அவர் பள்ளம் தோண்டி உள்ளே இறங்கினார். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மேல் வெளியே வந்து விடுவதாக அவர் அறிவித்திருந்தார். சாமியார் உள்ளே இறங்கிய பின்னர் மண் மூடப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை அப்பகுதியில் பெரும் கூட்டம் கூடி சாமியார் வெளியே வருவதைக் காணக் காத்திருந்தது.
ஆனால் 10 மணியைத் தாண்டியும் சாமியார் வெளியே வரவில்லை. இதனால் குழப்பமடைந்த கூட்டத்தினர் மண்ணைத் தோண்டிப் பார்த்தனர்.
அப்போது அமர்ந்த நிலையில் சாமியார் ஆனந்தசாமி இறந்திருந்தார்.
சம்பவம் அறிந்த போலீஸார் சாமியாரின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மூச்சுத் திணறி இறந்திருப்பதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications