மலேசியாவில் கொடுமைக்குள்ளான 2 தமிழர்கள் ஊர் திரும்பினர்
ராமநாதபுரம்
மலேசியாவில் கடும் சித்திரவதைக்கு ஆளான 2 இளைஞர்கள் ஒருவழியாய் அங்கிருந்து விடுதலையாகி சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
பரமக்குடியைச் சேர்ந்த கருப்பையா என்ற ஏஜென்ட் மூலம் மானாமதுரையைச் சேர்ந்த கோவிந்தராஜ், பரமக்குடியைச் சேர்ந்த வீரநாகமணி மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த 3 பேர் ஆகியோர் கடந்த மார்ச் 12ம் தேதி மலேசியாவுக்கு வேலைக்குச் சென்றனர்.
இதற்காக ஒவ்வொரு இளைஞரும் கருப்பையாவுக்கு தலா ரூ. 85,000 பணம் கொடுத்துள்ளனர். கோலாலம்பூரில் அவர்களுக்கு வேலை என்று கூறப்பட்டுள்ளது. கோலாலம்பூர் சென்றடைந்ததும் மிக கூலி வேலை செய்ய பணிக்கப்பட்டுள்ளனர்.
சொன்ன வேலை கொடுக்காமல் வேறு வேலை கொடுக்கிறார்களே என்று அதிர்ச்சி அடைந்தனர் 5 பேரும் இது குறித்து கேட்டபோது, அவர்களை தனி அறையில் அடைத்துள்ளனர்.
அவர்களை ரமேஷ் என்பவரும், ஒரு சீனரும் சேர்ந்து சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர். தங்களது நிலை குறித்து வீரநாகமணி தனது மனைவி அமுதாவுக்குக் கடிதம் எழுதினார்.
அமுதா பெண்கள் அமைப்பு ஒன்றில் உறுப்பினராக உள்ளார். தனது கணவர் உள்ளிட்ட 5 பேரின் நிலை குறித்தும் அவர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். இந்தச் செய்தி பத்திரிக்கைகளிலும் வெளியானது.
செய்தி வெளியானதும், மலேசிய நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் செல்வம் என்பவர் இதில் தலையிட்டு பிரச்சினை பெரிதாகாமல் தடுக்கும் பொருட்டு 5 பேரையும் சொந்த ஊருக்கே திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் செய்தார்.
இதைத் தொடர்ந்து வீர நாகமணியும், கோவிந்தராஜுவும் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர். மற்ற 3 பேர் இன்னும் விடுவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications