ஒரு சொட்டு நீர் கூட தர முடியாது: தரம்சிங் பெருந்தன்மை
பெங்களூர்:
தமிழகத்திற்கு காவிரி நீரைத் தருவது இயலாத காரியம். இதுதொடர்பாக மத்திய அரசு நெருக்குதல் கொடுத்தாலும் பணிய மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் தரம்சிங் கூறியுள்ளார்.
பெங்களூரில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தமிழகத்திற்குத் தண்ணீர் தரும் பிரச்சினை குறித்து விவாதித்த தரம்சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காவிரிப் பிரச்சினையை தமிழகம் அரசியலாக்குவதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசியவர்கள் தெரிவித்தார்கள்.
தண்ணீர் தர முடியாத நிலையில் கர்நாடகம் உள்ளது. எனவே எந்த நெருக்குதலுக்கும் அடிபணிய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. குறிப்பாக மத்திய அரசு கொடுக்கும் நெருக்குதலுக்கு அடிபணிய வேண்டாம் என அனைத்துக் கட்சிகளும் கோரியுள்ளன.
தமிழகத்திற்கு போதிய நீரை ஏற்கனவே திறந்து விட்டு விட்டோம். எனவே இனியும் தண்ணீர் கொடுப்பது தேவையற்றது என்று அனைத்துக் கட்சிகளும் கருத்துத் தெரிவித்துள்ளன.
தற்போதைக்கு தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க இயலாத நிலை உள்ளது என்றார் தரம்சிங்.