உயர்நீதிமன்றக் கிளை: மதுரை வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
மதுரை:
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்றக் கிளையை உடனடியாக திறக்கக் கோரி மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மதுரை உலகனேரியில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை அமைக்கப்பட்டுள்ளது. பல முறை திறப்பு விழா குறித்து தேதி அறிவிக்கப்பட்டும் நீதிமன்றம் திறக்கப்படாமல் உள்ளது.
இதைத் திறந்தால் தங்களது பிஸினஸ் அடிபட்டுப் போகும் என்பதால் கிளையைத் திறக்க விடாமல் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் பல தடங்கல்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந் நிலையில் மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் இன்று காலை நடந்தது. இந்தக் கூட்டத்தில், மதுரை கிளையை உடனடியாக திறக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று காலை முதல் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் இறங்கியுள்ளனர். இதனால் நீதிமன்றப் பணிகள் அனைத்தும் முழுமையாக முடங்கிப் போயுள்ளன.
மேலும், மதுரை கிளை திறக்கப்படும் வரை தென் மாவட்டங்கள் முழுவதிலும் பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
ஜூலையில் திறப்பு?:
இந் நிலையில் மதுரையில் உயர் நீதிமன்றக் கிளையை ஜூலை மாதத்திற்குள் திறக்க அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் பரத்வாஜ் தெரிவித்துள்ளதாக தமிழக காங்கிரஸ் சட்டப் பிரிவு தலைவர் சூர்யபிரகாசம் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜூன் 9ம் தேதி காங்கிரஸ் சட்டப் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள், பழனி மக்களவை உறுப்பினரான கார்வேந்தன் தலைமையில், டெல்லி சென்று சட்டத்துறை அமைச்சர் பரத்வாஜை சந்தித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை திறப்பு குறித்து விவாதித்தனர்.
அப்போது, நீதிமன்றக் கிளையை ஜூலை மாதத்திற்குள்ளாகவே திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பரத்வாஜ் உறுதியளித்ததார் என்றார் சூர்யபிரகாசம்.












Click it and Unblock the Notifications