வாக்காளர்களை நீக்கியது அரசு ஊழியர்கள் தான்: அதிமுக
டெல்லி:
மாநிலத்தில் 43 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை தமிழக அரசு ஊழியர்கள் திட்டமிட்டு நீக்கிவிட்டதாக தேர்தல் கமிஷனிடம் தமிழக அரசு புகார் கொடுத்துள்ளது.
இது குறித்து முழுமையாக விசாரிக்கும்படியும் அரசு கோரியுள்ளது.
தனது அரசால் வேலை நீக்கம் செய்யப்பட்ட லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் தங்களைப் பழி வாங்குவதற்காக அதிமுக ஆதரவு வாக்குகளை நீக்கியதாக அதிமுக கூறியுள்ளது.
இது தொடர்பாக அதிமுக தேர்தல் குழுச் செயலாளரும் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்ட மனுவை ராஜ்யசபா அதிமுக எம்.பிக்கள் குழுத் தலைவர் பி.ஜி.நாராயணன் தலைமையிலான அதிமுக எம்.பிக்கள் இன்று டெல்லியில் தேர்தல் கமிஷனிடம் அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
வேலை நிறுத்தம் செய்த அரசு ஊழியர்களுக்கு எதிராக தமிழக அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகளையடுத்து அவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சியினருடன் சேர்ந்து வாக்காளர் பட்டியலில் இருந்து அதிமுக ஆதரவு வாக்காளர்களின் பெயர்களை திட்டமிட்டு அரசு ஊழியர்கள் நீக்கியுள்ளனர்.
இதனால் எதிர்காலத்தில் வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு, பட்டியல் உருவாக்கும் பணியில் அரசு ஊழியர்களை ஈடுபடுத்துவதற்குப் பதிலாக, படித்த வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இதன் மூலம் தனிப்பட்ட கோப, தாபங்களை வைத்து பழி வாங்கும் நடவடிக்கைகளில் இறங்கி தேர்தலையே கேலிக் கூத்தாக்கும் மக்கள் விரோத சக்திகளிடம் இருந்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்.
வாக்காளர் பட்டியலை உருவாக்கும்போது அரசு ஊழியர்கள் சோம்பேறித்தனமாக செயல்படுகின்றனர். மேலும் ஒருதலைப்பட்டசமாகவும் செயல்படுகின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு அரசு ஊழியரும் அதிமுகவுக்கு எதிரான ஏதாவது ஒரு கட்சியைச் சேர்ந்த தொழிற் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதனால் இனிமேல் அரசு ஊழியர்களை வைத்து வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் வேலையை தேர்தல் கமிஷன் கைவிட வேண்டும். இதைச் செய்யாவிட்டால் ஜனநாயகத்தில் தேர்தல் கமிஷனுக்கே நம்பிக்கையில்லை என்று தான் அர்த்தம் கொள்ள முடியும்.
இவ்வாறு அந்த மனுவில் காட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து கேரள மாநில தலைமைத் தேர்தல் ஆணையர் மூலம் தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தி வரும் நிலையில் அதிமுகவின் சார்பில் இப்படிப்பட்ட மனு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications