கொள்ளு, குதிரை, திமுக: ஜெ. உவமைத் தாக்கு
சென்னை:
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலையை மத்திய அரசு உயர்த்தியிருப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2ம், டீசல் விலை ரூ. 1ம், கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ. 20ம் உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
காங்கிரஸ், திமுக, பா.ம.க. மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி அரசு மத்தியில் பதவியேற்றவுடன் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தி கோடானுகோடி மக்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது.
இந்த மக்கள் விரோத செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக அரசின் தவறான செயல்களால் தான் தமிழகத்தின் நிதி நிலை அதாள பள்ளத்துக்குப் போனது.
இதனால் என் தலைமையில் அடுத்து அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மின் கட்டணம், பேருந்து கட்டணங்களை குறைவான, நியாயமான அளவில் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆனால், அப்போது குய்யோ.. முறையோ என கூக்குரலிட்ட கட்சிகள் தான் இன்று மத்திய அரசில் பங்கேற்கு பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை நியாயப்படுத்துகின்றன.
மக்கள் நலன் கருதி எனது அரசு பல கட்டண உயர்வுகளைத் திரும்பப் பெற்றுள்ளது. அதே போல மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் கட்டண உயர்வுகளைத் திரும்பப் பெறுவார்களா என்று அறிய விரும்புகிறேன்.
இலாகாக்களைக் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த இந்தக் கட்சிகளுக்கு மக்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. அடிமட்ட மக்களுக்காக பாடுபடுவோம் என்று அடுக்கடுக்காய் பொய்களை அள்ளிவிட்டுத் தானே இந்தக் கட்சிகள் ஆட்சியைப் பிடித்தன.
தமிழகத்தில் விலைவாசி கொஞ்சம் உயர்ந்தாலும் கூரையில் ஏறி கூப்பாடு போடும் கருணாநிதி இன்று வாய்மூடி மெளனியானது ஏன்?
ஹாவர்ட், ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்களில் பயின்ற திருவாளர்கள் ப.சிதம்பரம், மணிசங்கர் அய்யர் போன்ற மேதாவிகளுக்கு ஏழைகளின் சிரமம் பற்றி என்ன தெரியும்?
ஏழைகள் மீது இன்னும் என்னென்ன அஸ்திரங்களை இந்த நவநாகரீக நவீன மனிதர்கள் வீசப் போகிறார்களோ தெரியவில்லை. ஏழைகளின் தோழர்கள் என்று கூறிக் கொள்ளும் கம்யூனிஸ்டுகள் எப்படி இந்த பெட்ரோல், டீசல், கேஸ் விலையை அனுமதித்தன.
கொள்ளு என்றால் வாயைத் திறந்து, கடிவாளம் என்றால் வாயை மூடிக் கொள்ளும் குதிரைகளை மாதிரி, வளமான இலாகாக்களுக்காக போராடிய திமுகவைப் போன்ற கட்சிகள் இன்று அமைதி காக்கின்றன.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும் என்பது மாதிரி காங்கிரஸ் கூட்டணியின் பொய்யான வாக்குறுதிகள் முதல் அறிவிப்பிலேயே வெளியாகிவிட்டன.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications