போலீஸ் பொய் வழக்கு: வாலிபர் தீக்குளிப்பு
போடி:
தன் மீது போலீசார் பொய்யாக திருட்டுக் குற்றம் சாட்டியதால் மனமுடைந்த வாலிபர் காவல் நிலையம் முன் தீக் குளித்தார். உடல் முழுவதும் எரிந்து போய் மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
போடி சந்தைப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் (24) சமையல்காரராக உள்ளார். போலீஸ்காரர் சக்திவேல் என்பவரின் தங்கச் சங்கிலி காணாமல் போனது தொடர்பாக மணிகண்டனை போலீசார் விசாரித்தனர்.
சங்கிலியை நான் திருடவில்லை என்று மணிகண்டன் சொல்லியும் கேட்காமல், அவரை நேற்றிரவு முழுவதும் போலீசார் போடி காவல் நிலையத்தில் வைத்து அடித்து உதைத்துள்ளனர்.
இதையடுத்து ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் விட்டுவிடுகிறோம் என்று சொல்லி விடுவித்துள்ளனர். ஆனால், பணத்தைத் திரட்ட முடியாத மணிகண்டன் போலீசாருக்குப் பயந்து இன்று காலை உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு காவல் நிலையத்துக்கு எதிரே போய் உடலில் தீ வைத்துக் கொண்டார்.
நான் திருடவில்லை.. நான் திருடவில்லை என்று தீயில் எரிந்து, அலறியபடியே ஓடிய மணிகண்டன் மயங்கி விழுந்தார். அவர் மீது நீரை ஊற்றி அப் பகுதி மக்கள் தீயை அணைத்தனர்.
ஆனால், உடல் பெருமளவில் வெந்து போன நிலையில் மணிகண்டன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தவறாக ஒருவரைத் தண்டித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications