கபினியிலிருந்து தமிழகத்துக்கு பாயும் 20,000 கன அடி நீர்
பெங்களூர்:
கபினி அணைக்கு விநாடிக்கு 25,000 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், தமிழகத்திற்கு விநாடிக்கு 20,000 கன அடி நீர் திறந்து விடப்படுவதாக கர்நாடகம் அறிவித்துள்ளது.
கர்நாடகத்தில் உள்ள நான்கு முக்கிய காவிரி அணைப் பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மேலும், கேரளாவின் வயநாடு பகுதியிலும் தொடர்ந்து கன மழை பெய்கிறது. இதனால் வயநாடு பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன.
அப் பகுதியில் உற்பத்தியாகி கர்நாடகத்தில் காவிரியோடு கலக்கும் கபிலா ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கபி-னி அணைக்கு கூடுதல் நீர் வந்து கொண்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி விநாடிக்கு 25,000 கன அடி நீர் கபி-னிக்கு வந்து கொண்டுள்ளது. அணை நிரம்ப இன்னும் 3 அடி மட்டுமே தேவை.
இதனால் அணையின் பாதுகாப்பைக் கருதியும், பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோளை ஏற்றும், தமிழகத்திற்கு விடப்படும் தண்ணீரின் அளவை விநாடிக்கு 20,000 கன அடியாக அதிகரித்துள்ளது கர்நாடகம்.
இதனை கபி-னி அணையின் பொதுப் பணித்துறை பொறியாளர் மல்லப்பா உறுதி செய்தார்.
இந்தத் தண்ணீர் நாளை மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு விநாடிக்கு 22,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இந்த அணையும் நிரம்பும் சூழல் ஏற்பட்டால், அணையின் பாதுகாப்பைக் கருதி கர்நாடகம் நீரைத் திறந்துவிடும்.