நீர் திறந்து விட்டதாக சொல்கிறது கர்நாடகம்
பெங்களூர்:
பிரதமரின் கோரிக்கைையை ஏற்று நேற்று முதல் தமிழகத்துக்கு கபினி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருவதாக கர்நாடக முதல்வர் தரம்சிங் கூறியுள்ளார்.
(கபினியில் வெள்ளப் பெருக்குக் காரணமாக, இதற்கு மேல் நீரைத் தேக்க முடியாத சூழல் நிலவுவதால், நேற்று முன் தினம் முதலே நீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.)
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய தரம்சிங்,
பிரதமரின் கோரிக்கையை ஏற்று கபினியில் இருந்து மட்டும் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நீர் வரத்தைப் பொறுத்து மேலும் நீர் திறப்பது குறித்து யோசிக்கப்படும். வினாடிக்கு 14,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
அணைக்கு வினாடிக்கு 21,000 முதல் 23,000 கன அடிவரை நீர் வந்து கொண்டுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நீரைத் திறந்துவிடுவது நல்லது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் யோசனை தெரிவித்தனர்.
இன்னும் 3 நாட்களுக்கு நீர் விடப்படும். அதற்குப் பின் நீர் வரத்து இருந்தால் மேலும் திறப்பது குறித்து யோசிப்போம்.
பா.ஜ.க, வாட்டாள் எதிர்ப்பு:
இதற்கிடையே தங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தமிழகத்துக்கு நீர் திறந்துவிட்டதற்கு கர்நாடக பா.ஜ.க. மூத்த தலைவர் எதியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதே போல கன்னட சாளுவளி அமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜூம் நீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
நாளை நீர் மேட்டூர் வரும்:
கர்நாடகத்தின் கபிணி அணையிலிருந்து வந்து கொண்டிருக்கும் நீர் நாளை (சனிக்கிழமை) மேட்டூர் அணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தண்ணீர் தற்போது தமிழக எல்லைக்குள் நுழைந்துள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். நாளை இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று தெரிகிறது.
தற்போது மேட்டூர் அணையில் 40.04 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு விநாடிக்கு 999 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 50 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.












Click it and Unblock the Notifications