ராம.கோபாலன் மீதான வழக்கை வேகப்படுத்த உத்தரவு
சென்னை:
முஸ்லீம்களை கொள்ளையர்கள் என்றும், கிருஸ்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் பேசிய இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் மீதான வழக்கு விசாரணையை துரிதப்படுத்துமாறு போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கும்பகோணத்தில் நடந்த இந்து எழுச்சி மாநாட்டில் ராம கோபாலன் பேசுகையில், கிறிஸ்தவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும். முஸ்லீம்கள் கொள்ளையர்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து முஸ்லீம் லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஹைதர் அலி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் ராம.கோபாலன் மீது புகார் கொடுத்தாலும் அதை வாங்க போலீசார் மறுப்பதாக ஹைதர் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ராம. கோபாலன் மீது வழக்குப் பதிவு செய்ய கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ராம.கோபாலன் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.
ஆனால், அதன் பின்னர் வழக்கை போலீசார் கிடப்பில் போட்டுவிட்டனர். இதைத் தொடர்ந்து ஹைதர் அலி மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
அவரது மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி நாகப்பன், இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் மீதான வழக்கு விசாரணையை வேகப்படுத்துமாறும், இறுதி விசாரணை அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி கும்பகோணம் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.