தண்ணீர் வந்தும் பயனில்லை.. விவசாயிகள் சங்கம்
தஞ்சாவூர்:
கர்நாடகத்திலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்து குறுவை சாகுபடியில் ஈடுபட்டால் அறுவடையின்போது விவசாயிகளுக்கு பெரும் இழப்பு காத்திருக்கும் என்று தமிழ்நாடு காவிரி டெல்டா விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ரங்கநாதன் எச்சரித்துள்ளார்.
ரங்கநாதன் நிருபர்களிடம் கூறுகையில்,
கபிணி அணையிலிருந்து கர்நாடகம் இப்போது தான் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. அதேபோல, கிருஷ்ணராஜ சாகரும் நிரம்பினால் தமிழகத்திற்கு கூடுதல் நீர் கிடைக்கும். இதனால் காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால் ,இந்த சந்தோஷத்தில் குறுவை சாகுபடியைத் தொடங்கினால் அறுவடை நேரத்தில் பெரும் இழப்பை சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை விவசாயிகள் உணர வேண்டும்.
குறுவை சாகுபடியைப் பொருத்தவரை மே மாதத்திலேயே நாற்று வளர்த்து விட வேண்டும். ஜூன் மாதத்தில் நடவு நட வேண்டும். அப்போதுதான் அறுவடைக்கு சரியாக இருக்கும்.
ஆனால், டெல்டா பகுதியில் நிலவிய கடும் நிலத்தடி நீர்ப் பஞ்சம் மற்றும் கர்நாடகம் உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாதது ஆகிய காரணங்களால் பல பகுதிகளில் விவசாயிகள் இன்னும் நாற்றே வளர்க்கவில்லை.
இனிமேல் நாற்று வளர்த்து, நடவு செய்தால், ஆகஸ்ட் மாதத்தில் அறுவடைக்குப் பயிர்கள் தயாராகும்போது, வட கிழக்குப் பருவ மழை குறுக்கிட்டு பயிர்களை நாசமாக்கி விடும்.
எனவே கர்நாடகம் தாமதமாகத் தந்துள்ள தண்ணீரை நம்பி குறுவை சாகுபடியில் இறங்கினால் அறுவடையின்போது பாதிக்கப்பட நேரிடும் என்பதை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு ஒரே மாற்று, தற்போது கிடைக்கும் தண்ணீரை மேட்டூர் அணையிலேயே தேக்கி வைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
தேக்கி வைக்கப்படும் தண்ணீரைக் கொண்டு வரும் சம்பா நெல் சாகுபடியை ஒழுங்காக செய்யலாம். இதன் மூலம் விவசாயிகளின் குறுவை நஷ்டத்தைத் தவிர்ப்பதோடு, சம்பா மூலம் அவர்கள் வாழ்வையும் காக்க முடியும் என்றார் ரங்கநாதன்.












Click it and Unblock the Notifications