சேலத்திலும் விஜயகாந்த் ரசிகர்கள் மீது தாக்குதல்
சேலம்:
சேலத்தில் கடைகளில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் புகைப்படங்களை அகற்றக் கோரி பாமக தொண்டர்கள் அட்டகாசம் செய்தனர்.
ரஜினியுடன் மோதி ஓய்ந்துள்ள பாமக இப்போது விஜயகாந்த்தைப் பிடித்துக் கொண்டுள்ளது. விஜயகாந்த்தை அரைவேக்காடு என பாமக நிறுவனர் ராமதாஸ் காட்டமாக வர்ணித்துள்ளார்.
தலைவரின் சிக்னலைப் புரிந்துகொண்டு விட்ட தொண்டர்கள், விஜயகாந்த்துக்கு எதிராக ஆங்காங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை அம்பத்தூரில் விஜயகாந்த் மன்ற போர்டுகளை உடைத்து அட்டகாசம் செய்தனர் பாமகவினர்.
இதையடுத்து சேலத்திலும் பாமகவினர் விஜயகாந்த்துக்கு எதிராக நடந்து கொண்டுள்ளனர். அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள சில கடைகளில் விஜயகாந்த் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைகளுக்கு பாமகவினர் வந்தனர்.
இனிமேல் விஜயகாந்த் படங்களை வைக்கக் கூடாது, கழற்றி எரி என்று ஆவேசமாகக் கூறிய அவர்கள் கடை முன் வைக்கப்பட்டிருந்த பால் கேனை தட்டி விட்டு பாலைத் தரையில் ஊற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பாமகவினரின் இந்த கலாட்டாவால் விஜயகாந்த் ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள். இருப்பினும், விஜயகாந்த் இதுதொடர்பாக இன்னும் எதுவும் கருத்து தெரிவிக்காமல் இருப்பதால் அவர்களும் அமைதி காத்து வருகிறார்கள்.
இதற்கிடையே சேலம் பச்சியப்பன் தியேட்டரில் திரையிடப்பட்ட விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படத்தை எடுக்கச் சொல்லி பாமகவினர் விடுத்த கோரிக்கையை ஏற்று குத்து படத்தை திரையிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications