அதிமுகவினருக்கு கோயில் அறங்காவலர் பதவிகள்
சென்னை:
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக கோயில்களுக்கு அறங்காவலர்களாக அதிமுகவினரை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோற்றவர்களுக்கு வாரியத் தலைவர் பதவிகள் வழங்கப்பட்டன. அதே போல அதிமுக நிர்வாகிகள் பலரும் அரசு வாரியங்களின் தலைவராகியுள்ளனர்.
இந் நிலையில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களுக்கு அறங்காவலர்களாக அதிமுகவினரை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பொறுப்புகளில் கட்சியின் தீவிர விசுவாசிகள், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள், கட்சியில் பதவி கிடைக்காதவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதனையடுத்து பதவியைப் பிடிக்க கட்சிக்காரர்கள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் சிபாரிசுகளைத் தேடி அவர்களை முற்றுகையிட்டு வருகின்றனர்.
பதவி வாங்கித் தருவதாகக் கூறி சில முக்கியத் தலைகள் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளன.
வருமானம் அதிகமுள்ள கோயில்களில் அறங்காவலர் பதவியைப் பெற கடும் போட்டி நிலவுகிறது. மயிலை கபாலீஸ்வரர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன், பழநி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் முருகன் கோயில்கள் ஆகிய கோயில்களில் அறங்காவலர் பதவியை அடைய கட்சியினர் போட்டா போட்டி போடுகின்றனர்.
முன்பு வாரியப் பதவிக்கு கல்லூரி முதல்வர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications