திடீரென வந்தார்.. எங்கே போனார்?
சேலம்:
மான் தோல் மீது அமர்ந்து ஆசி வழங்கிய விவகாரத்தில் வனத்துறையினரின் ரெய்டுக்கு உள்ளான குட்டி சாமியார் பரணீதரன் திடீரென தலைமறைவாகிவிட்டார்.தெய்வீகம் திருமண மண்டபத்தில் போலீஸ் பாதுகாப்புடன் தங்கியிருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த அவர் திடீரென காணாமல் போனார்.
இதையடுத்து அவரிடம் ஆசி வாங்க வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந் நிலையில் திடீரென ஒரு ஸ்வீட் ஸ்டாலின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட குட்டி சாமியார், மீண்டும் ஆசிரமத்தின் ஜீப்பில் ஏறி அமர்ந்து பறந்துவிட்டார். அவரது ஜீப்புக்கு முன்னும் பின்னுமாக ஏராளமான கார்கள் சென்றன.
இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்ற விவரத்தை ஆசிரம நிர்வாகிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
நிருபர்கள் தொடர்ந்து விவரம் சேகரிக்க முயலவே, குட்டி சாமியாரின் சார்பில் ஒருவர் நிருபர்களை சந்தித்து இதை பரணீதர சுவாமிகள் உங்களிடம் சொல்லச் சொன்னார் என்று கூறி ஒரு தகவல் தந்தார்.
அவர் கூறியதாவது:
நான் எந்தத் தவறும் செய்யவில்லை. இதனால் தலைமறைவாக வேண்டிய அவசியம் இல்லை. என்னைப் பற்றி சிலர் தவறான தகவல் பரப்பி வருகின்றனர். நான் எங்கும் தப்பியோடவில்லை என்பதை நிரூபிக்கவே பொது நிகழ்ச்சியில் (ஸ்வீட் ஸ்டால் திறப்பு விழா) பங்கேற்றேன்.
எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே பக்தர்களை சந்திக்கவில்லை. மன அமைதிக்காக கோவில்களுக்கு சென்று வந்து கொண்டுள்ளேன். 2 நாட்களில் மீண்டும் பக்தர்களைச் சந்திப்பேன்.
என் ஆன்மீக சேவை பிடிக்காத சிலர் வதந்திகளை கிளப்புகிறார்கள். அவர்களை பகவான் பார்த்துக் கொள்வார்.
இவ்வாறு குட்டி சாமியார் சொல்லச் சொன்னதாக அவரது பக்தர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications