கபினி நீரால் மேட்டூர் அணை மட்டம் 2 அடி உயர்வு !
சேலம்:
கடந்த புதன்கிழமை கபினி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) 9.30 மணிக்கு மேட்டூர் அணையை வந்தடைந்தது. தொடர்ந்து வரும் நீர் காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்தது.
கர்நாடகத்தின் கபினி அணை நிரம்பியதையடுத்து அந்த அணையிலிருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டது. வினாடிக்கு 25,000 கன அடி நீர் என்ற விகிதத்தில் அங்கிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
வழக்கமாக 72 மணி நேரத்தில் மேட்டூர் அணையை வந்தடையும் கபினி நீர், ஆற்றுப் படுகை தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்ததால், பெரும்பாலான தண்ணீர் நிலத்தால் உறிஞ்சப்பட்டு மிகவும் தாமதமாகவே வந்தது.
இதனால் ஞாயிற்றுக்கிழமை தான் தமிழக எல்லையான பில்லிகுண்டுவை வந்தடைந்தது. இரவில் இந்த நீர் மேட்டூரை அடைந்தது.
நேற்றிரவு வினாடிக்கு 3,000 கன அடி என்ற விகித்தில் கபிணி நீர் வந்தது. இன்று காலை இது வினாடிக்கு 9,000 கன அடியாக அதிகரித்தது. பிற்பகல் 12 மணியளவில் வினாடிக்கு 22,456 கன அடி என்று மேலும் அதிகரித்தது.
பில்லிகுண்டுவில் இந்த நீர் வரத்தைக் காவிரி நீர் கண்காணிப்பு ஆணைய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
நீர் வரத்தால் மேட்டூர் அணையின் மட்டம், கடந்த 24 மணி நேரத்தில் 2 அடி உயர்ந்து. இன்று பிற்பகல் நிலவரப்படி 42.54 ஆக இருந்தது.
60 அடியை நீர் தொட்டால்தான் பாசனத்துக்காக அணையைத் திறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கபினி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளதாக அம் மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு வரை அணைக்கு விநாடிக்கு 25,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்ததாகவும், அது தற்போது வினாடிக்கு 19,000 ஆக குறைந்துவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
நீர்வரத்து குறைந்தால், அணை மூடப்படும் என்று கர்நாடக முதல்வர் தரம்சிங் ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications