அதிமுகவில் எஸ்.வி.சேகர்: தலைவி ஆணையிட்டால்...
சென்னை:
இதுவரை பாஜகவில் இருந்து வந்த நாடக, சினிமா நடிகர் எஸ்.வி.சேகர் இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
சட்டசபைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, முதுபெரும் அரசியல் தலைவராக திகழ்ந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனை விட அதிக ஓட்டுக்கள் வாங்கி ஒரு காலத்தில் பரபரப்பூட்டியவர் பிரபல சேகர்.
காஞ்சி மடத்தின் ஆசி பெற்ற சேகர் பின்னர் பாஜகவில் இணைந்தார். டிவிக்களில் காவிச் சட்டையுடன் வந்தமர்ந்து பா.ஜ.க ஆதரவு பிரச்சாரம் செய்து வந்தார். சமீபத்திய தேர்தலின்போதும் பாஜகவுக்கு பிரசாரம் செய்தார்.
இந் நிலையில் இன்று காலை முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார் எஸ்.வி.சேகர்.
ஜெயலலிதாவிடம் சேகர் சால்வையை வழங்க, அவருக்கு அதிமுக உறுப்பினர் அட்டையை வழங்கினார் முதல்வர்.
பின்னர் சேகர் கூறியதாவது:
எல்லா கட்சிகளும் சிறுபான்மையினருக்கு மட்டுமே குரல் கொடுக்கும்போது, முதல்வர் ஜெயலலிதா மட்டுமே இந்துக்களுக்காக குரல் கொடுத்தார். கோவில்களில் அன்னதானம் போன்ற நல்ல திட்டங்களை நிறைவேற்றிய முதல்வரின் கடவுள் பக்தியும், துணிச்சலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இதுவரை நான் எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இருந்ததில்லை. இப்போது தான் முதல் முறையாக அதிமுகவில் உறுப்பினராகியுள்ளேன்.
பா.ஜ.கவுக்கும் அதிமுகவுக்கும் இடையே கொள்கை அளவில் வேற்றுமை ஏதுமில்லை. தாய் என்பது நாடு, தந்தை என்பது மதம், அதன் பிறகு தான் மொழிக்கு நான் முக்கியத்துவம் தருகிறேன்.
இனி எனக்கு ஒரே தலைவி புரட்சித் தலைவி தான். அவர் ஆணையிட்டால் கழகக் கொள்கைகளை மக்களிடம் சேர்ப்பேன். தலைவிையை நம்பியவர்கள் வீண் போனதில்லை என்றார் உணர்ச்சிவசமாக.












Click it and Unblock the Notifications