கடும் கோபத்தில் திமுக
சென்னை:
தனது வெளிநாட்டுப் பயணத்தை ஒத்தி வைத்துவிட்டு, ரசிகர்களுடன் விஜயகாந்த்தும் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ள விஜயகாந்த்தின் அடுத்த கட்ட நடவடிக்கையை அரசியல் வட்டாரம் தீவிரமாக உற்று நோக்கி வருகிறது.
மத்திய அரசில் இலாகாக்களைக் கேட்டு மோதியதாகச் சொல்லி திமுகவையும், ஜாதிக் கட்சி என்ற பெயரில் பா.ம.கவையும் கடுமையாக விமர்சித்த விஜய்காந்த், அதிமுகவை மட்டும் விமர்சிக்கவில்லை.
தாங்கள் ஆட்சியில் இருந்தபோது தங்களை ஆகா.. ஓகோவென புகழ்ந்த விஜய்காந்த் இப்போது ஆட்சியில் இருக்கும் அதிமுகவுக்கு சாதகமாக நடந்து கொள்வதாக நினைக்கிறது திமுக. வர்த்தகரீதியில் கல்லூரிகள் நடத்தி வரும் விஜய்காந்த், அதற்காக ஆட்சிக்கு தக்க தனது நிலையை மாற்றிக் கொள்வதாக திமுக கருதுகிறது.
அதே நேரத்தில் மத்தியில் தங்களிடம் வருமான வரித்துறை இருப்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டி முரசொலியில் கேள்வி-பதில் பகுதியில் எழுதியிருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி.
சினிமாவில் விஜய்காந்த் வாங்கும் எக்கச்சக்க ஊதியம், சினிமாவில் புழங்கும் கருப்புப் பணம் ஆகியவற்றை முடிச்சு போட்டு, வருமான வரித்துறை வசம் உள்ள ரெய்ட் ஆயுதத்தைச் சுட்டிக் காட்டவே கருணாநிதி இப்படி எழுதியிருப்பதாகக் கூறுகிறார்கள்.
அதே நேரத்தில், அதிமுகவை விஜய்காந்த் மறைமுகமாக ஆதரித்தாலும்,சினிமாவை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட அதிமுக எந்த அளவுக்கு விஜய்காந்தை ஆதரிக்கும் என்று தெரியவில்லை.
ரஜினியை வளர்த்தால் தங்களுக்கே அது எதிர்காலத்தில் சிக்கலாகிவிடும் என்பதால் தான் அவர் தானே வலிய வந்து கொடுத்த ஆதரவைக் கூட முதல்வர் ஜெயலலிதா கண்டுகொள்ளாமல் விட்டார்.
இந் நிலையில் அதிமுவுக்கு பலம் நிறைந்த கிராமப்புறங்களில் பாப்புலராக விளங்கும் விஜய்காந்துக்கு ஜெயலலிதா கொம்பு சீவி விட மாட்டார் என்ற நம்பிக்கையில் திமுகவும் பாமகவும் உள்ளன.
என்ன ஆனாலும் சரி, விஜய்காந்துடன் மோதிப் பார்த்துவிடுவதில் பா.ம.க தீவிரமாக உள்ளது.
ஆனால், திமுகவோ, தங்களை நோக்கி விஜய்காந்த் வீசும் விமர்சனங்களுக்கு மட்டுமே பதில் சொல்வது, மற்றபடி ரஜினியை கண்டு கொள்ளாமல் விட்டது மாதிரி விஜய்காந்த் விஷயத்திலும் அமைதியாக இருந்துவிடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளது.
விஜய்காந்த் தங்களுக்கு எதிராக ஓவராகப் போகும்பட்சத்தில் வருமான வரித்துறை மூலம் வேலையைக் காட்டுவது என்ற முடிவில் உள்ளது திமுக.












Click it and Unblock the Notifications