கலர் டிவி ஊழல்: 13ம் தேதி விசாரணை
சென்னை:
பஞ்சாயத்துகளுக்கு கலர் டிவிக்கள் வழங்கியதில் நடந்த ஊழல் வழக்கில் இருந்து முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஜூலை 13ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ள.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பஞ்சாயத்துகளுக்கு கலர் டிவிக்கள் வழங்கப்பட்டன. இதற்காக, ரூ. 10.16 கோடி செலவில் பிபிஎல் நிறுவனத்திடம் 45,000 கலர் டிவிக்கள் வாங்கப்பட்டன.
இதற்காக அந்த நிறுவனத்திடம் இருந்து சில கோடிகள் லஞ்சமாக கைமாறியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, அவரது அக்காள் மகன் பாஸ்கரன்,
முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் செல்வகணபதி, தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான பாண்டே, சத்தியமூர்த்தி, செல்வகணபதியின் பி.ஏவான ஜனார்தனம், இடைத் தரகர்களான துரைசாமி, முத்துக்குமார சாமி ஆகியோர் மீது வழக்குத் தொடர்ந்தது.
இவர்கள் மீது தனி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. நீதிமன்ற விசாரணையில் ஊழல் நடந்தது நிரூபணமானது. ஆனால், இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, பாஸ்கரன் ஆகிய மூவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது.
அதே நேரத்தில் செல்வகணபதி, ஹரிபாஸ்கர், பாண்டே, சத்தியமூர்த்தி, ஜனார்தனம், துரைசாமி, முத்துக்குமார சாமி ஆகிய 7 பேருக்கும் 5 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து இவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்து தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த தண்டனை ரத்துகளையும், ஜெயலலிதா, சசிகலா, பாஸ்கரன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் தமிழக அரசின் சார்பில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி, தண்டனை ரத்துக்களையும், ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதையும் ஒரே நேரத்தில் விசாரிக்கக் கோரினார். இது தொடர்பான மனு தாக்கல் செய்யவும் அவகாசம் கோரினார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 13ம் தேதிக்கு நீதிபதி ராமலிங்கம் ஒத்தி வைத்தார்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சில வழக்குகளே விசாரிக்கப்பட்டன. அதில் இந்த வழக்கும் ஒன்று.












Click it and Unblock the Notifications