தாலி பறித்த 3 திருடர்களுக்கு அடி, உதை
தேனி:
தேனி மாவட்டம் வெங்கடாச்சலபுரம் பகுதியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த 3 திருடர்களை கிராம மக்கள் தூணில்கட்டி வைத்து அடித்து, உதைத்து ரத்தம் சொட்டச் சொட்ட போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வெங்கடாச்சலபுரம் கிராமத்தைச் சே ர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி பத்மாவதி. இவர் தனது தோட்டத்திற்கு தனியாகநடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் சைக்கிளில் வந்த 3 பேர் பத்மாவதி அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினர்.
பத்மாவதி கூக்குரல் எழுப்பியதைத் தொடர்ந்து அப் பகுதியினர் திரண்டு வந்து 3 திருடர்களையும் விரட்டினர். காட்டுப் பகுதியில்தப்பியோடிய திருடர்களை பல மைல் தூர துரத்தலுக்குப் பின்னர் மக்கள் சுற்று வளைத்துப் பிடித்தனர்.
3 திருடர்களையும் ஊருக்குள் இழுத்து வந்த பொது மக்கள் தூணில் கட்டி வைத்து சரமாரியாக உதைத்தனர். ஆண்களும்பெண்களும் சிறுவர்களும் சேர்ந்து கொண்டு மானாங்கண்ணியாக அடித்துத் துவைத்தனர்.
இதில் மூவருக்கும் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மூவரையும் குற்றுயிரும் குலையுயிருமாக தரதரவென இழுத்துக்கொண்டு வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.