புலிகளை கட்டுப்படுத்த பொடா தேவை: ஜெ
சென்னை:
பொடா சட்டத்தை வாபஸ் பெற்றால் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார். மேலும் அந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்துமாறுஅனைத்து மாநில முதல்வர்களுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
இன்று ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:
பொடாவைத் திரும்பப் பெறுவதால் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பெரும் கேடு விளையப் போகிறது.மத்திய அரசின் இந்த ஒருதலைப்பட்டசமான முடிவை எதிர்க்குமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்எழுதியிருக்கிறேன்.
பொடா சட்டம் ரத்தானால், தீவிரவாதத்தைத் தடுக்கும் மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவுஏற்படும். சட்டம்-ஒழுங்கு என்பது மாநிலங்களின் பிரச்சனை என்ற நிலையில், பொடாவை நீக்குவது குறித்து மாநிலஅரசுகளுடன் மத்திய அரசு கலந்து ஆலோசிக்காதது கடும் கண்டனத்துக்குரியது.
தேசிய அளவில் விவாதம் நடத்தப்பட்ட முடிவெடுக்கப்பட வேண்டிய விஷயம் இது. இதை அனைத்து மாநிலஅரசுகளும் மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி எதிர்க்க வேண்டும்.
பொடா சட்டம் போய்விட்டால் தீவிரவாதம், தீவிரவாதிகளைத் தண்டிக்க மாநில அரசுகளிடம் எந்தவிதமான சிறப்புஅதிகாரமும் இல்லாமல் போய்விடும். பழைய சட்டங்களை வைத்துக் கொண்டு தீவிரவாதத்தைத் தடுக்க முடியாது.
உலக அளவிலான பாதுகாப்பில் வேகமான மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், செப்டம்பர் 11 தாக்குதலுக்குப்பின் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தீவிரவாத அச்சுறுத்தல்களை சமாளிக்கவும் பொடாவைப் போன்ற மிகக்கடுமையான சட்டங்கள் நிச்சயம் தேவை.
சர்வதேச பாதுகாப்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை இப்போது இல்லை. பாகிஸ்தானின் எல்லை தாண்டிபயங்கரவாதம் இன்னொரு பக்கம். இது போன்ற சூழலில் பொடாவை நீக்குவது என்பது மிகப் பெரியஆபத்தையே விளைவிக்கும்.
பொடாவை ரத்து செய்வதன் மூலம் இந்தியாவை தீவிரவாதிகளின் எளிதான இலக்காக மத்திய அரசு மாற்றப்போகிறது.
தமிழகத்தில் பொடாவின் உதவியால் தீவிரவாத, அடிப்படைவாத அமைப்புகளை ஒடுக்கி வைத்திருக்கிறோம்.விடுதலைப் புலிகள் இயக்கம், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழ்நாடு விடுதலைப் படை, தமிழ் தேசிய மீட்புப்படை ஆகியவை பொடா சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளன.
சட்டத்தை தீவிரமாக அமலாக்குவதாலும், சிறந்த கண்காணிப்பு காரணமாகவும், முன்னெச்சரிக்கை கைதுகள்காரணமாகவும் தமிழகத்தை அமைதிப் பூங்காவாக பேணிக் காத்து வருகிறோம். தீவிரவாத அமைப்புகளைதலையெடுக்க விடாமல் தடுத்து வருகிறோம்.
புலிகள் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க பொடா போன்ற சட்டங்கள்இன்றியமையாதவை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.