கும்பகோணத்தில் அப்துல் கலாம்
கும்பகோணம்:
பள்ளித் தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூற ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று கும்பகோணம் வந்தார்.
மாலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்த கலாமை ஆளுநர் ராம்மோகன் ராவ் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கும்பகோணம் சென்ற கலாம், தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் மீண்டும் திருச்சி திரும்பும் கலாம், அங்குள்ள அரசினர் சுற்றுலா மாளிகையில் தங்குகிறார். நாளை காலை ஹெலிகாப்டரில் சிதம்பரம் செல்லும் கலாம், அண்ணாமலை பல்கலைக்கழக பவள விழாவில் பங்கேற்கிறார்.
மேலும் சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் கிராமத்தில் இயங்கும் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார். இதைத் தொடர்ந்து ஹெலிகாப்டரில் தனது சொந்த ஊரான ராமேஸ்வரத்துக்கு அப்துல் கலாம் செல்கிறார்.
பள்ளிவாசல் தெருவில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று அண்ணன் மீரான் மரைக்காயரையும் உறவினர்களையும் சந்திக்கிறார். வெள்ளிக்கிழமை தொழுகைக்காக முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்குச் செல்கிறார்.
பின்னர் மண்டபம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுரை வருகிறார். மதுரை லேடி டோக் பெண்கள் கல்லூரியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து மதுரை ரிசர்வ் லைன் போலீஸ் மைதானத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை விமான நிலையம் செல்கிறார்.
அங்கிருந்து விமானப் படை விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications