குடும்பக் கட்டுப்பாடு கட்டாயமாகாது: அன்புமணி
டெல்லி:
நாமிருவர் நமக்கிருவர் விழிப்புணர்வுத் திட்டம் அமலில் உள்ளதால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த இதற்குமேலும் புதிய திட்டம் ஏதும் தேவையில்லை என மத்திய நலத்துறை அமைச்சர் அன்புமணி கூறினார்.
இஸ்லாமியர்களின் மக்கள் தொகை வளர்ச்சி குறித்து மத்தியக் கணக்கெடுப்பு வாரியம் வெளியிட்டபுள்ளிவிவரத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அன்புமணி,
சிறுபான்மையினர் மத்தியில் குடும்பக் கட்டுப்பாடு குறித்து அதிகமான விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைஎடுக்கப்படும். சிறுபான்மை மதத் தலைவர்களையும் உள்ளடக்கிய தேசிய அளவிலான விவாதம் கூட நடத்தலாம்.
அதே நேரத்தில் குடும்பக் கட்டுப்பாட்டை யார் மீதும் திணிக்க மாட்டோம். இது அவர்களாகவே முன் வந்து செய்யவேண்டிய விஷயம். ஒரு குடும்பத்துக்கு இரு குழந்தைகள் என்ற விழிப்புணர்வுத் திட்டம் அமலில் உள்ளது. அதைமேலும் தீவிரமாகப் பரப்புவோம்.
அதைவிட்டுவிட்டு குடும்பக் கட்டுப்பாட்டை கட்டாயமாக திணிக்கும் வேலைகளில் அரசு இறங்காது. சிறுகுடும்பத்தினருக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவது, அதிக குழந்தைகள் இருந்தால் சலுகைகளைப் பறிப்பது போன்றசெயல்கள் எல்லாம் உகந்தவை அல்ல.
விழிப்புணர்வு, பிரச்சாரம் மூலமாக சிறு குடும்பத்தின் அவசியத்தை உணர்த்த தேசிய அளவில் தீவிர முயற்சிகளைஎடுக்க உள்ளோம் என்றார்.