நமது கிராமம் திட்டம் விரைவில் தொடக்கம்
சென்னை:
அதிமுக அரசின் நமது கிராமம் திட்டம் விரைவில் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
கடந்த பட்ஜெட்டில் கிராமப்புற வளர்ச்சிக்காக நமது கிராமம் என்ற புதிய திட்டத்தை அரசு அறிவித்தது.
ரூ. 200 கோடியில் இந்தத் திட்டம் அமலாக்கப்படும் எனவும் பட்ஜெட்டின்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.தற்போது இந்தத் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
கிராமப்புற குழந்தைகளுக்கு 100 சதவீத கல்வி, பெண் சிசு கொலைகளை தடுப்பது, கர்ப்ப காலத்தில் சிசு இறப்பைத்தடுப்பது, வறுமை ஒழிப்பு, கிராமப்புற சுகாதாரம் உள்ளிட்டவை இத் திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.
கிராமப்புறங்கள் தன்னிறைவு பெறும் வகையில், சென்னையைத் தவிர மற்ற 29 மாவட்டங்களிலும் உள்ள 12,618கிராமங்களிலும் நமது கிராமம் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
இத் திட்டத்தின்படி ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு வளர்ச்சி குழு அமைக்கப்படும். சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தின்தலைவர், துணைத் தலைவர், ஒரு பெண், ஒரு தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்த பிரதிநிதி, சுய உதவிக்குழு உறுப்பினர், உள்ளூரைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர், கிராம சேவகர்கள் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெறுவர்.
நமது கிராமம் திட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் சரியான முறையில் அமலாக்கப்படுவதை இந்தக் குழு, கிராமசபையுடன் சேர்ந்து மேற்பார்வையிடும்.
இத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது. விரைவில் இந்தத் திட்டத்தை தமிழக அரசு அமலாக்கவுள்ளது.