பெங்களூர்: எலெக்ட்ரானிக் சிட்டிக்கு புதிய பாலம்- பாலு
பெங்களூர்:
பெங்களூரின் மிக மோசமான போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில், நகரின் மையப் பகுதியில்இருந்து எலக்ட்ரானிக் சிட்டி வரை 9 கி.மீ. தூரத்துக்கு மிக நீண்ட பாலம் அமைக்கப்படும் என மத்திய தரைவழிப்போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு அறிவித்துள்ளார்.
சமீப காலமாக பெங்களூர் பெரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வருகிறது. ஆங்காங்கே,மேம்பாலங்கள் கட்டப்பட்டு வந்தாலும் நெரிசலை சமாளிக்க முடியவில்லை.
குறிப்பாக சாப்ட்வேர் நிறுவனங்கள் பெருமளவில் அமைந்துள்ள கோரமங்களா, ஒசூர் ரோடு, பி.டி.எம். லே-அவுட்ஆகிய பகுதிகளை வாகனங்கள் கடக்க நெடு நேரம் ஆகிறது. இதனால் பெங்களூரில் இனி தங்களது புதியதிட்டங்களைத் தொடங்கப் போவதில்லை என பல முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் மிரட்டி வருகின்றன.
இந் நிலையில் நேற்று ஒசூர் ரோட்டில் நிலைமையை டி.ஆர். பாலுவே நேரடியாகப் பார்வையிட்டார்.எலெக்ட்ரானிக் சிட்டியில் ஆரம்பித்து நகரின் மையப் பகுதி வரை பல இடங்களில் அதிகாரிகளுடன் சோதனைநடத்திய பாலு, பல முன்னணி சாப்ட்வேர் நிறுவன அதிபர்களையும் சந்தித்தார்.
இன்று முதல்வர் தரம்சிங்கை சந்தித்த பாலு, இப்போதுள்ள நான்கு வழி ஒசூர் சாலையின் மேலேயே,எலெக்ட்ரானிக் சிட்டி வரை 9 கி.மீ. நீளத்துக்கு புதிய பாலம் கட்டித் தரத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
இது குறித்து பாலு கூறுகையில்,
இந்தப் பாலத்தைக் கட்ட ரூ. 400 கோடி செலவாகும். இத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தனி அமைப்புஉருவாக்கப்படும். இந்தத் திட்டத்துக்குக்கான 33.3 சதவீத நிதியை எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள சாப்ட்வேர்நிறுவனங்களே முதலீடு செய்யும்.
மீதமுள்ள 66.7 சதவீத நிதியை மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறையும், மாநில அரசும் ஆளுக்குப் பாதியாகசெலவிடும்.
கட்டணம் செலுத்தி இந்தப் பாலத்தை பொது மக்கள் உபயோகிக்க வேண்டும்.
இந்தப் பணி குறித்த ஆய்வு அறிக்கை அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் தயாரிக்கப்பட்டுவிடும். அதன்பின்ஏப்ரல் 2ம் தேதியே அடிக்கல் நாட்டி, உடனடியாக பாலம் கட்டும் பணி தொடங்கப்படும்.
இரண்டு ஆண்டுகளில் பணி முடிவடைந்துவிடும் என்றார்.