மகாராஷ்டிர முதல்வர் பதவி: பவாரின் புது மிரட்டல்
மும்பை:
அடுத்த முதல்வராக எந்தக் கட்சியைச் சேர்ந்தவரைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து காங்கிரசும் தேசியவாதகாங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் மேலும் வலுத்துள்ளது.
இரு தரப்பினரும் விட்டுக் கொடுக்க மறுத்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் அதில்சேர மாட்டோம் என தேசியவாத காங்கிரஸ் மிரட்டியுள்ளது.
தாங்கள் 71 இடங்களிலும் காங்கிரஸ் 69 இடங்களிலும் வென்றுள்ளதால் முதல்வர் பதவியை தங்களுக்கே தரவேண்டும் என சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது.
நேற்று சோனியா காந்தியும் சரத்பவாரும் சந்தித்துப் பேச்சு நடத்தியும் குழப்பத்துக்கு தீர்வு ஏற்படவில்லை.
இந் நிலையில் புதியாகத் தேர்வு செய்யப்பட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று நடக்கிறது.இதில் சட்டமன்றத் தலைவர் தேர்வு செய்யப்படவுள்ளார். முதல்வர் பதவி இக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் இந்தத்தலைவர் தான் முதல்வராவார்.
வெளியில் இருந்து ஆதரவு?:
முதல்வர் பதவியை தங்களுக்கு விட்டுத் தர காங்கிரஸ் மறுத்தால், அக் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதுஎன்றும், அந்தக் கட்சியுடன் ஆட்சியில் பங்கெடுபப்பதில்லை என்றும் தேசியவாத காங்கிரஸ் முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக இரு கட்சிகளும் கூட்டாக ஆட்சி நடத்தியது குறிப்பிடத்தக்கது. இப்போது முதல்வர் பதவிவேண்டும் அல்லது வெளியில் இருந்து தான் ஆதரவு என சரத்பவார் கூறுவது காங்கிரசுக்கு அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.
இதனால் சோனியா-பவார் இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிகிறது. முதல்வர் பதவிகுறித்த சிக்கல் தீர மேலும் சில நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.