லாரி- பஸ் விபத்தில் 8 பயணிகள் பரிதாப சாவு
சென்னை:
சென்னை அருகே டிரெய்லர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட பிரமாண்டமான இரும்பு பாலங்களை (பார்கள்), அரசு பேருந்தில் உரசியதில்8 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சேலத்திலிருந்து பிரமாண்டமான இரும்பு பாலங்களை ஏற்றிக் கொண்டு ஒரு டிரெய்லர் லாரி சென்னை அருகே உள்ள சிறுசேரிதொழிற்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது.
இந்த லாரி வண்டலூர் அருகே உள்ள மேலக்கோட்டையூர் என்ற இடத்தில் வந்தபோது, எதிரே தாம்பரத்திலிருந்து திருப்போரூர் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தின் ஒரு பக்கத்தில் உரசியது.
இதில் பேருந்தின் ஒரு பக்கத்தை இரும்பு பார்கள் கிழித்தன. இதில் பேருந்தில் பயணம் செய்த 6 பயணிகள் உடல்களும் கிழிந்தன. சிலரதுகழுத்துக்களும் துண்டிக்கப்பட்டன. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்தில் பலியாயினர். மேலும் 5 பேர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு இறந்தனர்.
மேலும் 60 பேர் காயமடைந்துள்ளனர்.
லாரி மற்றும் பஸ் டிரைவர்களின் கவனக் குறைவும், குறுகிய சாலையில் இருவருமே வாகனங்களை மிக பயங்கர வேகத்தில் ஓட்டியதும்தான் இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
விபத்து நடந்ததும் லாரியின் டிரைவர் ஆறுமுகம் (35) அந்த இடத்திலிருந்து தப்பியோட முயன்றான். அவனை பொது மக்கள் விரட்டிப்பிடித்து, உதைத்து ஒரு வீட்டில் கட்டிப் போட்டு பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கோரி அவர்களது உறவினர்கள் வெண்பேடு கிராமம் அருகேசாலை மறியலில் ஈடுபட்டதால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.