கொலைக்கு திட்டம் போட்டு தந்த சங்கராச்சாரியார்!
வேலூர்:
சங்கராச்சாரியாரை ஜாமீனில் விடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணயைை உயர் நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துவிட்டது.
இந்த மனு மீது விசாரணை முடியும் வரை, இடைக்கால ஏற்பாடாக, சங்கராச்சாரியாரை சிறைச் சாலைக்குப் பதிலாக வீட்டுக் காவலில்வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
சங்கராச்சாரியாரை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி அவரது வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல்செய்தனர். இந்த மனு இன்று காலை நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஜெயேந்திரர் சார்பில் மூத்தவழக்கறிஞர் சுப்ரமணியம் ஆஜரானார். அரசின் சார்பில் வழக்கறிஞர் துரைசாமி ஆஜரானார்.
வீட்டுக் காவலில் வைக்கலாம்:
வழக்கறிஞர் சுப்பிரமணியம் கூறுகையில், காஞ்சி மடாதிபதிக்கு 70 வயதாகி விட்டது. சர்க்கரை வியாதி உள்ளது. எனவே அவருக்குசிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. மேலும், ஆசார முறைப்படியே அவர் சாப்பிடுவார். மேலும் பல்வேறு பூஜைகளையும் அவர் செய்யவேண்டியுள்ளது.
எனவே சங்கராச்சாரியாரை சிறையில் அடைக்காமல், ஏதாவது ஒரு வீடு அல்லது பங்களாவில் காவலில் வைக்கலாம் என்றார். இதற்கு அரசுவழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது நீதிபதி குறுக்கிட்டு, ஜெயேந்திரரை சிறைக்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்கலாம். அரசுக்குச் சொந்தமான அல்லது அரசுவிரும்பும் இடத்தில் அவரை காவலில் வைக்கலாம். அப்போது அவரை யாரும் சந்திக்கக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கலாம். அதேநேரத்தில் மடாதிபதிக்கு சர்க்கரை வியாதி இருப்பதால் அவரை மருத்துவர் மட்டும் சந்திக்க அனுமதிக்கலாம்.
இந்த யோசனையை அரசு ஏற்றால், இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்துக் கொள்ளலாம்.அல்லது ஜாமீன் மனுவை தொடர்ந்து மாலையில் விசாரிப்பேன் என்றார் நீதிபதி பாலசுப்பிரமணியம்.
கொலையாளிகளுடன் பேசிய சங்கராச்சாரியார்:
இந் நிலையில் மீண்டும் மாலையில் ஜாமீன் மனு மீது விசாரணை நடந்தது. அப்போது பேசிய அரசு வழக்கறிஞர் துரைசாமி,
இந்த வழக்குக்கு அரசியல் சாயம் பூச வேண்டிய அவசியமே இல்லை. போலீசாரிடம் பிடிபட்ட கொலையாளிகள் சிலருடன் சங்கரராமனின்கொலை நடப்பதற்கு முன்பும், கொலை நடந்த பின்பும் பலமுறை தொலைபேசியில் பேசியிருக்கிறார் சங்கராச்சாரியார். அதற்கான ஆதாரம்போலீசாரிடம் உள்ளது.
கொலையாளிகளுக்கு போன பணம்:
மேலும் கொலை நடந்த மறுநாள் தனியார் வங்கியில் உள்ள சங்கர மடத்தின் கணக்கில் இருந்து பெரும் தொகை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத்தொகையில் பெரும் பகுதியை கொலையாளிகளிடம் இருந்து போலீசார் மீட்டுள்ளனர்.
கொலையாளியிடம் சங்கரராமனின் கடிதம்:
இதைத் தவிர மடம் குறித்த சில ரகசியங்கள் விரைவில் வெளியாகும் என்று சங்கராச்சாரியாருக்கு சங்கரராமன் எழுதிய கடிதத்தையும்கொலையாளிகளிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர் போலீசார். இந்தக் கடிதத்தை கொலையாளிகளில் ஒருவனிடம் தந்ததே சங்கராச்சாரியார்தான்.
இதனை கொலையாளியே வாக்குமூலத்தில் கூறியுள்ளான். சங்கரராமனின் அட்ரஸ் என்று சொல்லி அவர் எழுதிய கடிதத்தையேகொலையாளிகளிடம் சங்கராச்சாரியார் தந்திருக்கிறார். இத்தனை ஆதரங்கள் இருந்ததால் தான் இந்தக் கைது நடந்தது என்றார்.
மறுத்த சங்கராச்சாரியாரின் வழக்கறிஞர்:
அப்போது பேசிய சங்கராச்சாரியாரின் வழக்கறிஞர்,
கொலையாளிகளின் தொலைபேசிகளில் பேசியது சங்கராச்சாரியார் அல்ல. மடத்தின் மேனேஜர் தான். மடத்தின் செலவுக்காகத் தான்வங்கியில் இருந்து பணம் எடுக்கப்பட்டது. கொலையாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் வேறு வகையில் அவர்களுக்குக்கிடைத்திருக்கலாம்.
அதே போல சங்கராச்சாரியாரை சிக்க வைக்கும் திட்டத்துடன் சங்கரராமன் எழுதிய கடிதம் என்ற பெயரில் ஒரு கடிதத்தைகொலையாளிகளிடம் யாராவது தந்திருக்கலாம். அதை சங்கராச்சாரியார் தான் தந்தார் என்பதற்கு கொலையாளியின் வாக்குமூலம்மட்டுமே ஆதாரமாகிவிடாது.
இந்த ஜாமீன் மனு மீது விசாரணை முடியும் வரை சங்கராச்சாரியாரை சிறைக்குப் பதிலாக தனி வீட்டிலோ அல்லது பங்களாவிலோ காவலில்வைக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றார் வழக்கறிஞர் சுப்பிரமணியம்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம்:
சுப்பிரமணியத்தின் இந்த வாதத்துக்கு அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், சட்டத்தின் முன் அனைவரும்சமம். திட்டமிட்டு ஒரு கொலையை நடத்திய சங்கராச்சாரியாருக்கு சிறப்பு சலுகை எல்லாம் வழங்க வேண்டியதில்லை. சங்கராச்சாரியார்என்ற பதவியை நானும் மதிப்பவன் தான், அதில் அமர்பவர்களை அல்ல.
சிறையில் சங்கராச்சாரியாருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவையே போதுமானவை தான். பூஜை செய்ய எல்லா வசதியும்அவருக்கு செய்து தரப்படும். இதனால் அவரை தனி வீட்டில் சிறை வைக்க வேண்டியதில்லை. சிறைச்சாலை தான் சரியான இடம் என்றார்.
இதையடுத்துப் பேசிய அரசு வழக்கறிஞர், சங்கராச்சாரியார் குறித்து இந்த நீதிமன்றத்தில் நடந்ததைத் தவிர வேறு எதையும் எழுத செய்திநிறுவனங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றார். ஆனால், இக் கோரிக்கையை நீதிபதி நிராகரித்துவிட்டார்.
ஜாமீன் மனு மீது நாளையும் விசாரணை:
இதன் பின்னர் ஜாமீன் மனு மீது நாளையும் விசாரணை நடக்கும் என நீதிபதி பாலசுப்பிரமணியம் அறிவித்தார்.
இப்போது வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கராச்சாரியார் சிறைக் கண்காணிப்பாளரின் அறையில் அமரவைக்கப்பட்டுள்ளார். இரவில் தூங்க மட்டும் தனி அறை தரப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே, ஜெயேந்திரருக்கு ஆசார முறைப்படி உணவு வழங்கப்பட வேண்டும், வழக்கமாக அவர் 3 வேளை பூஜை செய்வார். அதற்குஅனுமதி வழங்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் ஜெயேந்திரரின் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்கராச்சாரியார் உண்ணாவிரதம்:
இதற்கிடையே வேலூர் சிறையில் அதிகாரிகள் கொடுக்கும் சாப்பாட்டை சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
சிறைக்குக் கொண்டு வரப்பட்டது முதல் மாலை வரை அவர் தண்ணீர் கூட சாப்பிடாமல் இருக்கிறார். சிறை அதிகாரிகள் மதிய உணவாகபால், பழம் ஆகியவற்றை கொடுத்தபோதும் அதை சாப்பிட ஜெயேந்திரர் மறுத்து விட்டார்.