நேபாளத்துக்கு தப்ப காத்திருந்த ஹெலிகாப்டர் !!!
சென்னை:
சங்கராச்சாரியார் நேபாளம் தப்பிச் செல்வதற்காக ஒரு ஹெலிகாப்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததை போலீசார்கண்டுபிடித்துள்ளனர்.
சங்கராச்சாரியார் நேபாளத்துக்கு தப்ப முயன்றதால் தான் அவரை இரவோடு இரவாக ஆந்திராவில் கமாண்டோ போலீஸ்படையை வைத்து கைது செய்ததாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது பொய்யான குற்றச்சாட்டு என பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளும் சங்கர மடமும் கூறி வருகின்றன.
இந் நிலையில் சங்கராச்சாரியாருக்காக ஒரு ஹெலிகாப்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் நேபாளம் செல்ல அந்தஹெலிகாப்டருக்கு அனுமதி பெறப்பட்டிருந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
இந்த ஹெலிகாப்டரை புனேவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் தான் சங்கராச்சாரியாருக்காக அனுப்பி வைத்தார் என்றும் போலீசார்கண்டறிந்துள்ளனர். இதற்கான ஆதாரங்களைத் திரட்டியுள்ள போலீசார் அந்தத் தொழிலதிபரையும் விசாரிக்கவுள்ளனர்.
கொலையாளிகளை போலீசார் நெருங்கியவுடனேயே தானும் கைதாகலாம் என்ற பயம் சங்கராச்சாரியாருக்கு வந்துவிட்டது.இதையடுத்து தனது தீவிர பக்தரான நேபாள மன்னரின் உதவியோடு அந்த நாட்டில் தஞ்சம் புக சங்கராச்சாரியார் திட்டமிட்டார்என்கின்றனர்.
நேபாளத்தில் இருந்தபடி கைதுக்கு எதிராக முன் ஜாமீன் பெறுவது என்றும் முடிவு செய்திருந்தார் என்கிறது போலீஸ்.