மாதையனுக்காக குண்டு மிரட்டல்
பட்டுக்கோட்டை:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையனை விடுவிக்கக் கோரி, பட்டுக்கோட்டை ரெயில்வே நிலையத்திற்கு வெடிகுண்டுமிரட்டல் விடுவிக்கப்பட்டது.
வீரப்பனும், அவனது கூட்டாளிகளும் கடந்த மாதம் 18ம் தேதி சுட்டு கொல்லப்பட்டனர். அதிலிருந்து தமிழ்நாடுவிடுதலைப்படை போன்ற சில தீவிரவாத அமைப்புகளின் சார்பில் ரெயில் நிலையங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும்வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளன.
இந் நிலையில் பட்டுக்கோட்டை ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், கோவை சிறையில் இருக்கும்வீரப்பனின் சகோதரரையும், திருச்சியில் இருக்கும் வீரப்பனின் 2 கூட்டாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.
அதிரடிப்படை வீரர்களுக்கு வழங்கிய விருது மற்றும் பரிசுப் பணத்தை வாபஸ் வாங்க வேண்டும்,
வீரப்பனின் மனைவிக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இல்லையென்றால் பட்டுக்கோட்டை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ்ரெயிலில் 20 நாட்களுக்குள் வெடிகுண்டு வெடிக்கும். -இவன் தமிழ்நாடு விடுதலைப்படை என்று எழுதப்பட்டு இருந்தது.
இது குறித்து போலீஸாரிடம் ஸ்டேசன் மாஸ்டர் புகார் தெரிவித்தார். இதையடுத்து பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்துக்கு பலத்தபோலீஸ் காவல் போடப்பட்டு உள்ளது.