ஏட்டு கண்ணனிடம் துருவி துருவி விசாரணை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக சங்கர மடத்தில் பணியில் இருந்த ஏட்டு கண்ணனிடம் தனிப்படை போலீஸார் சுமார் ஒரு மணிநேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மட நிர்வாகிகள்,ஊழியர்களிடம் நேற்று தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இந் நிலையில் ஏட்டு கண்ணனிடம் போலீஸார் தனி பங்களாவில் வைத்து விசாரணை நடத்தினர். ஏட்டு கண்ணன் சங்கர மடத்தில் காவல்பணியில் முன்பு ஈடுபட்டிருந்தார். ஜெயேந்திரருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்.
சங்கரராமன் கொலை செய்யப்பட்ட பின்னர் இவரிடம்தான் முதல் முதலாக போலீஸார் விசாரணை நடத்தினர். இவரிடமிருந்து கிடைத்ததகவல்களின் அடிப்படையில்தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்தே ஜெயேந்திரர் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.
ஜாமீன் மனு நாளை விசாரணை:
இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்திலும், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டவழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்திலும் ஜெயேந்திரர் தாக்கல் செய்த மனுக்கள் நாளை விசாரணைக்கு வருகிறது.