திமுக கூட்டணி போராட்டம்: லட்சக்கணக்கில் பங்கேற்பு
சென்னை:
ஜெயேந்திரர் கைதை பாஜகவினர் அரசியலாக்க முயற்சிப்பதைக் கண்டித்து திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள்பங்கேற்றனர், விழுப்புரத்தில் மட்டும் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜெயேந்திரர் கைது விவகாரத்துக்கு மதச் சாயம் பூசி அரசியலாக்க முயலும் பாஜக, விஎச்பி ஆகிய அமைப்புகளைக் கண்டித்தும், பணிநீக்கம் செய்யப்பட்ட 10,000 சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தரக் கோரியும் தமிழகம் முழுவதும் மாவட்டத்தலைநகரங்களில் இன்று திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்ஆகிய கூட்டணிக் கட்சிகள் தவிர அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் கழகம் உள்ளிட்ட கட்சிகளும் கலந்துகொண்டன.
சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரே திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் உள்பட 3000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கடலூரில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் தலைமையில் சுமார் 5,000 பேர் இந்தப் போராட்டத்தை நடத்தினர்.
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு தலைமையில் போராட்டத்தில் 2,000க்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டனர்.
விழுப்புரத்தில் போராட்டம் நடத்திய 1,000 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதே போல வேறு பல இடங்களிலும்ஆயிரக்கணக்கானவர்கள் கைதாகி விடுவிக்கப்பட்டனர்.