தலித்துக்கு நேர்ந்த கொடுமை
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம்பொள்ளாச்சி அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை அவமானப்படுத்திய வேறு வகுப்பைச் சேர்ந்த 7பேரை போலீஸார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ளது ஆவியூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவர். இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு வகுப்பைச் சேர்ந்த பஞ்சலிங்கம் என்பவருக்கும் இடையே கடந்த வாரம்தகராறு ஏற்பட்டுள்ளது.
தனிப்பட்ட இருவருக்கு இடையே நடந்த மோதலை பஞ்சலிங்கம் சார்ந்த ஜாதியினர் ஊர்ப் பிரச்சனையாக்கினர்.
ஊர்ப் பஞ்சாயத்து கூடி ராமசாமிக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி ஊரில் உள்ள கோவிலை 108 முறை ராமசாமி சுற்றிவர வேண்டும் என்று பஞ்சாயத்தார் தீர்ப்பளித்தனர்.
இதன்படி ராமசாமி கோவிலைச் சுற்றி வந்துள்ளார். ஆனால், இதன் பிறகு பஞ்சலிங்கம் சார்ந்த வகுப்பினர் ராமசாமியை கேலி பேசிஅவமானப்படுத்தியுள்ளனர். ஊரை விட்டே வெளியேற வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதனால் மனம் உடைந்த ராமசாமி கிராமத்தை விட்டு குடும்பத்துடன் வெளியேறினார்.
ஊரார் அவமானப்படுத்தியதால் நொந்து போன ராமசாமி மனமுடைந்த நிலையில் குடும்பத்தைவிட்டும் எங்கோ சென்றுவிட்டார்.
இதையடுத்து ராமசாமியின் குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுத்தனர்.
இந்தப் புகாரின் பேரில் பஞ்சலிங்கம் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் கைது செய்து அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காணாமல் போய்விட்ட ராமசாமியையும் போலீஸார் தேடி வருகின்றனர்.