வெள்ளம்: மத்திய குழு ஆய்வு
சென்னை:
மத்திய அரசு அனுப்பியுள்ள 6 பேர் கொண்ட வெள்ள நிவாரண ஆய்வுக் குழுவினர் இன்று காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர்மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழையின்போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால்விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தமிழக வேளாண்துறை ஆணையர் ஜக்மோகன் சிங் ராஜு வெள்ள பாதிப்பை ஆய்வு செய்து முதல்வர் ஜெயலலிதாவுக்குஅறிக்கை கொடுத்தார். அவரது ஆய்வின் அடிப்படையில் வெள்ள நிவாரண நிதியாக ரூ. 410 கோடி வழங்க வேண்டும் என்று மத்தியஅரசிடம் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.
இந் நிலையில் மத்திய நிபுணர் குழு இன்று காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.உள்துறை இணைச் செயலாளர் மிஸ்ரா தலைமையிலான ஒரு குழு இன்று காலை நாகப்பட்டனம் சென்றது.
அங்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வீரசண்முகமணியுடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் நாகை, திருவாரூர்,தஞ்சாவூர் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை குழுவினர் பார்வையிட புறப்பட்டுச் சென்றனர்.
சைதன்யமூர்த்தி தலைமையிலான மற்றொரு குழு கடலூர் மாவட்டம் சென்றது. அங்கு மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதி,மாவட்ட ஆட்சித் தலைவர் ககந்தீப்சிங் பேடி ஆகியோருடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
அதன் பின்னர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புக்கு ஆளான சில இடங்களை குழுவினர் பார்வையிடவுள்ளனர்.












Click it and Unblock the Notifications