நில நடுக்கம்- கடல் கொந்தளிப்பு: தமிழகத்தில் 50 பேர் பலி
சென்னை:
நிலநடுக்கம் காரணமாக சென்னையில் இன்று ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் 25 பேர் வரை பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டத்தில் 25 பேர் இறந்திருப்பார்கள் என அஞ்சப்படுகிறது.
சென்னையில் இன்று காலை லேசான நில அதிர்ச்சியும், அதைத் தொடர்ந்து கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டது. நில அதிர்ச்சி சில விநாடிகளில்அடங்கி விட்டாலும், கடல் கொந்தளிப்பு பெரிய அளவில் சென்னை நகரின் கடலோரப் பகுதிகளை ஆட்டிப் படைத்து வருகிறது.
கடலோரப் பகுதிகள் முழுவதும் கடல் நீர் உள்ளே புகுந்து வருகிறது. இதனால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்அங்கிருந்து அகற்றப்பட்டு வருகின்றனர்.
மீனவர்கள் வசிக்கும் குப்பங்களுக்குள் கடல் நீர் புகுந்ததால் கடல் நீரில் மூழ்கி 25 பேர் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம் ஆகிய பகுதிகளில் பல உடல்கள் கடல் நீரில் மிதந்து வந்ததாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.
இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குடிசைகள்இடிந்து விழுந்ததில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டவர்கள் சென்னையின் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீடு இழந்தவர்கள் பல்வேறு பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விநியோகப்பதற்காக 1 லட்சம் உணவுப்பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
கடல் கொந்தளிப்பு மிகவும் மோசமாக இருப்பதால் கடலோரப் பகுதி முழுவதும் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.கடற்கரைச் சாலையான காமராஜர் சாலை முழுவதும் மக்கள் வெள்ளமாக காணப்படுகிறது. மெரீனா கடற்கரையையே காணவில்லை எனும்அளவுக்கு கடல் நீர் ஊருக்குள் புகுந்து வருகிறது.
துறைமுகத்தின் சில கட்டடங்களில் கடல் நீர் புகுந்துள்ளது.
இதற்கிடையே, சென்னை விமான நிலைய ஓடு பாதையில் நில அதிர்வு காரணமாக விரிசல் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து விமான சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் கடலூர் மாவடத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் 25 பலியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. மாமல்லபுரத்திலும் கடல்நீர்உள்ளே புகுந்துள்ளது.