ஜெயேந்திரர் ஜாமீன் 31க்கு ஒத்திவைப்பு
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரரின் ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும்31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
கடந்த 2002 செப்டம்பர் மாதம் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் தங்களை ஜாமீனில் விடக் கோரி ஜெயேந்திரர் உட்பட 7 பேர்சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி பாலசுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது.ஜெயேந்திரர் தரப்பில் வழக்கறிஞர் சத்தியநாராயணனும், அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் துல்சியும் வாதாடினர்.
துல்சி வாதாடுகையில்,
சம்பவம் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர் ஜெயேந்திரரை பலமுறை சந்தித்துள்ளனர். அவர்களுக்குஇடையே நடந்த பேச்சு விவரங்கள் குறித்து தெரியாவிட்டாலும், சதி திட்டத்தை தொடர்ந்து நடந்த நடவடிக்கைகள் ஜெயேந்திரருக்குஇதில் தொடர்பிருப்பதை உறுதி செய்கின்றன.
காஞ்சி மடத்தில் நடந்த சில மோசடிகளை ராதாகிருஷ்ணன் வெளியிட்டதாலேயே அவர் தாக்கப்பட்டார். அவருக்கும் அவர் மீது தாக்குதல்நடத்தியவர்களுக்கும் எந்த முன்பகையும் இல்லை. அதனால் கொலை முயற்சி வழக்குக்கு ஜெயேந்திரர்தான் பொறுப்பு.
அதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. இப்போது ரவிசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. எனவே இந்த சமயத்தில் ஜெயேந்திரரை ஜாமீனில் விடக்கூடாது என்று துல்சி வாதாடினார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 31ம் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) நீதிபதி ஒத்திவைத்தார்.
ரவியின் போலீஸ் காவல் முடிவு:
இந் நிலையில் ரவி சுப்ரமணியத்தின் 3 நாள் போலீஸ் காவல் இன்று முடிவடைவதையடுத்து, இன்று மாலை 5 மணிக்கு காஞ்சிபுரம்நீதிமன்றத்தில் நீதிபதி உத்தமராஜ் முன்பு ஆஜர்படுத்தப்படுகிறார்.